Monday, June 7, 2010

ஹுண்டாய் கார் நிறுவனத்தில் உள்ளிருப்பு வேலை நிறுத்தம்

இந்தியாவில் கார் உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் சென்னை இருங்காட்டுக்கோட்டையிலுள்ள ஹுண்டாய் கார் தொழிற்சாலைக்குள் மூன்றாவது முறையாக வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தென்கொரிய நிறுவனமான ஹுண்டாய் தொழிற்சாலையில் பெரும்பான்மையான தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து மூன்றாண்டுகளுக்கு முன் தொழிற்சங்கம் அமைத்தனர். அன்றிலிருந்து ஹுண்டாய் நிர்வாகம் பல்வேறு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. 87 பேர் வேலை நீக்கம் மற்றும் பலர் இடைநீக்கம், இடமாற்றம் என்று பல வழிகளிலும் தொழிலாளர்களை வஞ்சித்த நிர்வாகத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட தொழிலாளர்கள் இறுதியாக வேலை நிறுத்தம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 20 அன்று முதல் வேலை நிறுத்தத்தைத் தொடங்கினர். தொழிலாளர் நல வாரியத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் தொழிலாளர் நல அதிகாரியின் அறிவுரையை ஏற்றுக் கொள்வதாக ஒப்புக் கொண்டதால் 18 நாட்களுக்குப் பிறகு வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது. ஆனால் ஹுண்டாய் நிர்வாகம் அரசு அதிகாரியின் அறிவுரையை மீறி தான் உருவாக்கிய பணியாளர் குழு என்ற பொம்மை அமைப்போடு சம்பள ஒப்பந்தம் போட்டது.

அதிருப்தியடைந்த தொழிலாளர்கள் இரண்டாவது முறையாக ஆலைக்குள்ளேயே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மீண்டும் நடந்த பேச்சுவார்த்தையில் அரசு அதிகாரியின் அறிவுரை ஏற்பதாகவும் பணி நீக்கம் செய்யப்பட்டோரில் 20 பேரை வேலைக்கு எடுத்துக் கொள்வதாகவும் உறுதி அளித்ததன் பேரில் வேலை நிறுத்தம் 6 நாடகளில் முடிவுக்கு வந்தது. 20 பேரை கருணை அடிப்படையில் பணி எடுத்துக் கொண்டதாக கூறிய நிர்வாகம் இன்னும் அவர்களை நிரந்தரம் செய்யாமல் வைத்துள்ளது. மேலும் வேதாளம் முருங்கை ஏறிய கதையாக, தொழிலாளர் நல வாரியத்தினரின் அறிவுரையை மீறி மீண்டும் பணியாளர் குழு என்ற பொம்மை அமைப்பை அமைக்கத் தேர்தல் நடத்த முயற்சி எடுத்தது.

கடும் அதிருப்தியடைந்த தொழிலாளர்கள் மூன்றாம் கட்டமாக டிசம்பர் மாதம் வேலை நிறுத்த நோட்டீஸ் விடுத்தனர். இந்த சமயம் கொரிய அதிபர் இந்தியக் குடியரசு தின விழாவில் பங்கேற்பதாக இருந்ததால் ஹுண்டாய் நிர்வாகத்தினர் உடனடியாக வேலை நீக்கத்தில் மீதியுள்ள 67 பேர் தொடர்பாக தொழிலாளர் நல வாரியம் என்ன முடிவெடுக்கிறதோ அதற்கு கட்டுப்படுவதாக உறுதியளித்தது. அதன் பேரில் அரசு அதிகாரிகள் 3 பேர் அடங்கிய குழு 67 பேரின் வழக்குகளை ஆய்வு செய்து முதற்கட்டமாக 35 பேரை மீண்டும் பணியில் அமர்த்த அறிவுருத்தியது.

தென் கொரிய அதிபரின் இந்திய வருகை நல்லபடியாக முடிந்து திரும்பிய பிறகு மீண்டும் தன் வேலையைக் காட்டியது ஹுண்டாய் நிர்வாகம். அரசின் அறிவுரையை ஏற்காமல் தட்டிக் கழித்தது. மேலும் பணி நீக்கம் செய்யப்ட்ட தொழிலாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து அனுப்பி விடலாம் என்று முயற்சி எடுத்து வருகிறது.

மேலும் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல், நேற்று தொழிற்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் உட்பட நான்கு பேர்களை இடை நீக்கம் செய்தது. அதிருப்தியின் எல்லைக்குச் சென்ற தொழிலாளர்கள் நேற்று இரவிலிருந்து ஆலைக்கு உள்ளேயே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுளளனர்.

2 comments:

  1. எழுச்சிமிகு போராட்டத்தை இணையத்தின் முலம் உலக தொழிலாளர் கவனத்திற்கு கொண்டுசென்ற தமிழ் மீரானுக்கு "ஹீன்டாய் மோட்டார் இநதியா தொழிலாளர் சங்கம்" நன்றி தெரிவித்துக்கிறது

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் தமிழ் யாளி அவர்களே

    ReplyDelete