Thursday, April 26, 2012

நினைவில் நிறைந்த கிராமத்து வீடு

இது
என் மழலைப் பருவத்தை
வசந்தமாக்கிய மாளிகை

சுகங்களை மட்டுமே
மனத்தில் நிறுத்திய
என் பிறந்த வீடு

விழுவது விழாமல் இருக்கத்தான்
அழுவது அழாமலிருக்கத்தான் எனும்
ஆரம்பப் பாடம் கற்றுத் தந்த
குருகுலம்

நிறைந்த மனமே
நிம்மதியின் இருப்பிடமென
அனுபவித்துத் தெரிந்த
ஆலயம்

நான்
கைக்குழந்தையாய் இருக்கையில்
கைமாறியதாம் இது
எங்கள் வீடாக
அம்மாவின் அணிகலன்கள்
அதற்கு ஈடாக

ஒரு வீடாய்த் தெரியும்
இது பெரியத்தாவுடையதும்
சேர்த்த இரு வீடு
இடையில் இருக்கவில்லை
இடைவெளி

முன்னே
பாய் நெய்யத் தறி போடுமளவு
திண்ணை

பின்னே
அம்மியும் அங்கணமும்
ஒரு பக்கம்
விறகடுப்பும் பாத்திரத் திண்டும்
மறு பக்கம்
ஊதுகுழலோடு அம்மா
உட்கார
இடையில் கொஞ்சம்
இடமுங் கொண்ட
அடுப்படி

மத்தியில்
வரவேற்பு அறை
படுக்கையறை படிப்பறை
உணவறை ஓய்வறை
எல்லாமுமாய் ஓர் அறை

மேலே
இரவல் ஏணியில் ஏறி
குறுக்கு வளைத்து
நெல் காயப் போட
மச்சி

முன்னால்
வேம்பும் முருங்கையும் நிழலிடும்
வீட்டைக் காட்டிலும்
விசாலமான முற்றம்

இவை
மற்றவர்கள் சொல்லும்
இந்த வீட்டின்
அளவீடுகள்

இந்தத் திண்ணைதான்
எத்தனை எத்தனைக்
கதைகள் கேட்டுருக்கும்?

அடுத்த தெரு
தண்ணிச் சண்டையிலிருந்து
அமெரிக்காவுக்கு சதாம்
தண்ணி காட்டியது வரை
இங்கே வாய் பிளந்து
கேட்ட அரட்டகள்தான் எத்தனை

மூலையில் இருக்கும்
அந்த ஆட்டுக்கல்
ஆட்டுவதை விட அமர்வதற்கே
அதிகம் பயன்பட்டிருக்கும்

அதோ
அந்த வாசல் நிலை
குழந்தைகளை மட்டுமே
நிமிர்ந்து வர அனுமதிக்கும்
பெரியவர்களை குனியச் செய்யும்
மறந்து நிமிர்ந்தால்
மறக்காமல் குட்டு வைக்கும்

இந்தக் கதவு
திறந்திருந்த காலங்களே
அதிகம்

இதன் திறவுகோல்
திறப்பதை காட்டிலும்
தேங்காய் உடைப்பதற்கே
தேவைப்பட்டது அதிகமாக

இந்தக் கதவில் ஆடிய
ஊஞ்சலின் சுகத்தை
எந்த ராட்டினம் தந்திருக்கும்?


வெய்யிற் காலம் நோன்பிருந்து
வெருந்தரையில்
சுருண்டு கிடந்ததும் இங்கேதான்

மழைக் காலம்
வடியும் நீர் பிடித்து
குடிநீராக்கியதும் இங்கேதான்

சிம்னி வெளிச்சத்தில்
சிலேட்டில் கோணலாக
வீட்டுப்பாடம் எழுதியதும்
இங்கேதான்

பின்னே
மின் இணைப்பு பெற்று
குழல் விளக்கெரிய
பெத்தா மூக்கில் விரல் வைத்ததும்
இங்கேதான்

பழைய சோறும்
அமிர்தமாய் தெரிய
பசித்து உண்டதும்
இங்கேதான்

வடக்குத் தெரு வரை
வாசம் செல்லும்
தேங்காய் சோறும் கறியானமும்
சேர்ந்து ருசிக்க
பெருநாள் கிடைத்ததும்
இங்கேதான்

பண்டம் கிடைத்தால்
பாகம் பிரித்து
பகிர்ந்து உண்டதும்
இங்கேதான்

சண்டை போட்டு
காலையில் பிரிந்து
மாலையில் சேரும்
உறவுகள் பெற்றதும்
இங்கேதான்

முன்னிரவு முற்றத்தில் பாய்விரித்து
அக்கா சொல்லும்
குருவிக் கதை கேட்டு
பாதியில் தூங்கியதும்
இங்கேதான்

அதிகாலையில் தொழ
அலாரம் இன்றி
அம்மா விழித்து
எழுப்பி விட்டதும்
இங்கேதான்


ஏழாம் வகுப்பில்
ஊரைப் பிரிந்து சென்றபோது
பிரிவின் வலியை
முதலில் உணர்த்தியதும்
இந்த வீடுதான்

எந்திரலோகச் சென்னையில்
வாடகைக் கொள்ளையரிடம் சிக்கி
வசவு கேட்ட போதெல்லாம்
திரும்பிடலாமா ஊருக்கு என
நினைக்க வைத்ததும்
இதே வீடுதான்

பின்னாளில்
பளிங்குத் தரையும்
குளிரும் அறையுமாக
சொந்த வீடு கட்டியும்
மீட்க முடியாத
அமைதியைத் தந்ததும்
இந்த வீடு மட்டுமேதான்


மழைக் காலம்
வரும் போதெல்லாம்
ஞாபகப்படுத்தும் இந்த
மண் மாளிகை
காலாவதியைக் கடந்து விட்டதை

இனி செப்பனிட ஏதுமில்லை
தானாய் விழும் முன்
நாமாய் இடிப்பது நல்லதென
கொத்தனார் நாள் குறிக்க

மனதைக் கல்லினும் கல்லாக்கி
இந்த மண் மாளிகையை
மண்ணோடு மண்ணாக்கிய போது
கண்களில் பொங்கிய நீருக்கு
கரையிட முடியவில்லை!

இடிபடும் முன்னால் இல்லை
விடைபெறும் முன்னால்
நோக்கியாவின் தயவில்
முதலும் கடைசியுமாய்
எடுத்த படங்கள் மட்டுமே மிச்சமாய்

இறைவன் நாடினால்...
நாளை நானிருந்தால்..
வேண்டா வெறுப்பாய் கேட்டாலும்
என் விழுதுகளுக்கு
விளக்கிச் சொல்வேன்
என் வேர்கள்
இந்த மண்ணிலிருந்துதான்
புறப்பட்டனவென்று.!

சடங்கு.!

எவரேனும் ஒருவர்
தோள் கொடுத்திருந்தால் போதும்..
அவர்
சாய்ந்திருக்க மாட்டார்
இதோ
இப்பொழுது நான்கு தோள்கள்
அவரைச் சுமக்கின்றன.!

ஏதேனும் ஒரு விழி
இரக்கப் பார்வை
வீசியிருந்தால் கூடப்போதும்
அவர்
வாழ்ந்திருக்கக் கூடும்
இதோ
இப்பொழுது எத்தனையோ விழிகள்
கண்ணீர் வடிக்கின்றன!

யாரேனும் ஒருவர்
வழி காட்டியிருந்தால்
அவர் பயணம்
முடிந்து போயிருக்காது
இதோ
இப்பொழுது எத்தனையோ பேர்
வழியனுப்ப வந்திருக்கிறார்கள்!

வயிற்றுக்கு கஞ்சி கிடைக்காதவர்
வாய்க்கு மட்டும்
இன்று அரிசியும் பாலும்!

வறுமையில் வாடி
உதிர்ந்தவர்
இதோ இங்கே
பூத்துக் கிடக்கிறார்
மாலைகளால்!

நடந்த காலங்களில்
அவருக்கு
வழி தராதவர்கள்
இதோ
இப்பொழுது வீதியெங்கும்
மலர் தூவுகிறார்கள்..
பாவம் அவர் பாதங்களோ
பாடையில்!

Thursday, April 5, 2012

'கூவல் திலகம்' - ஓ.பன்னீர்செல்வம்!

சினிமாவில் வரும் நகைச்சுவைக் காட்சி ஒன்றில் லிவிங்ஸ்டனைப் புகழ்ந்து தள்ளுவதற்காக வடிவேலு காசு கொடுத்து ஆட்களை நியமிக்க அதில் ஒருவர் 'வருங்கால ஜனாதிபதி' என்று சொல்வார். உடனே லிவிங்ஸ்டன் 'ங்கொய்யால.. இவன் நல்லா கூவுறாண்டா.. கூவல் திலகம்டா' என்று சொல்லிக் கொண்டே பாக்கெட்டிலிருந்து பணத்தைக் கொடுத்து 'அடுத்த முறை இன்னும் நல்லா கூவணும்' என்று சொல்ல அவரும் அடுத்த முறை 'வருங்கால அமெரிக்க ஜனாதிபதி முருகேசன் வாழ்க' என்பார்.

இது போன்ற காட்சிகளை சினிமாவில் வேண்டுமானால் பார்த்து வயிறு குலுங்க சிரிக்கலாம். ஆனால் தமிழக சட்டமன்றத்தில் அமைச்சர்கள் ஆளாளுக்கு போட்டி போட்டுக் கொண்டு இப்படிக் கூவிக் கொண்டிருந்தால் பார்க்கும் மக்களுக்கு வயிற்றெரிச்சலும் ஆத்திரமும்தான் வருகிறது.

அண்மைக் காலமாக சட்டமன்ற நிகழ்வுகளைப் பார்க்கவே எரிச்சலாக உள்ளது. அதுவும் நிதி அமைச்சரின் துதி பாடலுக்கு ஓர் அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. அம்மாவுக்கு பன்னீர் அபிஷேகம் செய்வதில் தனக்கு நிகர் தானே என்று தொடர்ந்து நிரூபித்து வருகிறார். பட்ஜெட் உரையின் போது அதிகபட்சமாக அம்மாவை உச்சரித்து சாதனை படைத்த அவர், இன்று(05/04/2012) பட்ஜெட் மீதான பொது விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய போது,

"பூகோள பாடத்தில் வேண்டுமானால் இந்தியாவின் தலைநகர் டெல்லி என்று இருக்கலாம். ஆனால், அரசியல் வரைபடத்தில் இந்தியாவின் தலைநகர் இனி சென்னை தான். இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போவது புரட்சித் தலைவி அம்மா தான்.

எங்களுக்கென்று தனி சொந்தம் இல்லை. அம்மாவின் சொந்தமே எங்கள் சொந்தம். எங்களுக்கென்று தனி நட்பு இல்லை. அம்மாவின் நட்பே எங்கள் நட்பு.

எங்களுக்கென்று தனி சிந்தனை இல்லை. அம்மாவின் சிந்தனையே எங்கள் செயல். எங்களுக்கென்று தனி வழி இல்லை. அம்மாவின் வழியே எங்கள் வழி.

அம்மாவுக்கு எங்கள் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் சமர்பிப்போம்"

என்று கூறு(வு)வதையும் அதற்கு அதிமுகவினர் விண்முட்ட மேசையைத் தட்டுவதையும் கேட்டு முதல்வர் முகத்தில் வேண்டுமானால் புன்னகை தவழலாம். ஆனால் மக்கள் முகம் சுழிப்பது இந்த மங்குனி அமைச்சர்களுக்கு எங்கே புரியப் போகிறது?

வெளியில் எப்படி வேண்டுமானாலும் புகழ்பாடுங்கள் இல்லை காலில் விழுங்கள் இல்லை நெடுஞ்சாண் கிடையாக அங்கப் பிரதட்சணமே கூட செய்யுங்கள் யார் கேட்கப் போகிறார்கள்? ஆனால் சட்டமன்றத்தில் நீங்கள் நிற்பது மக்கள் தந்த அங்கீகாரம். அங்கே நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ஆக்கப்பூர்மானதாக இருக்க வேண்டும். நீங்கள் புகழ்பாடுவதற்கும் அல்லது வேண்டாதவர்களை வசைபாடுவதற்குமான இடம் அல்ல சட்டமன்றம். உங்கள் கண்ணியத்தையும் உங்களுக்கான அதிகாரத்தையும் இழக்கலாமா? நீங்கள் பதவி ஏற்கும்போது எடுத்த உறுதிமொழி நினைவில் இருக்கிறதா அமைச்சர்களே?

"தமிழ்நாட்டு அரசின் அமைச்சராக உண்மையாகவும், உளச்சான்று படியும் எனது கடமைகளை செய்வேன் என்றும் அரசியல் அமைப்புக்கும் சட்டத்துக்கும் இணங்க, அச்சமும் ஒருதலை சார்பும் இன்றி, விருப்பு - வெறுப்பை விலக்கி, பல தரப்பட்ட மக்கள் அனைவருக்கும் நேர்மையானதை செய்வேன் என்று ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி மொழிகிறேன்"

என்று ஆண்டவன் மீது ஆணையிட்டு பதவியேற்ற நீங்கள் எங்களுக்கென்று சுயமான சிந்தனை கிடையாது மூளை கிடையாது முதுகெலும்பு கிடையாது என்றெல்லாம் சொல்வதற்கு வெட்கப் பட வேண்டாமா?

மாண்புமிகு முதல்வர் அவர்கள் இது போன்ற விஷயங்களைத் தடுக்க தொண்டர்களுக்கு ஒரே ஓர் ஆணையிட்டு இந்த புகழ்பாடலுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாமே! உங்கள் ஆட்சி முறையையும் நிர்வாகத் திறமையையும் மக்கள் புகழ வேண்டும். அதுதான் உண்மையான அங்கீகாரம். அதை விடுத்து உங்களுக்கு நீங்களே ஓயாமல் புகழ்பாடிக் கொண்டிருந்தால் மக்களிடம் வெறுப்பை சம்பாதிப்பதைத் தவிர வேறு எந்த பலனும் இல்லை. தனக்குத் தானே சிலை வைத்துக் கொண்டவரின் நிலை உ.பி.யில் என்னவானது என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

கடைசியாக, அமைச்சர்களே அரசியல்வாதிகளே, என்னைப் போன்றவர்களுக்கெல்லாம் சட்டமன்றத்தை விமர்சிக்கும் அளவுக்கு தகுதியை மீண்டும் ஏற்படுத்தித் தராதீர்கள்!

Monday, April 2, 2012

என்னைக் கவர்ந்த சென்னைத் தமிழ்

அது 1999ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம். சொந்த ஊரான திருநெல்வேலியிலிருந்து பணி நிமித்தம் சென்னைக்கு பலவித கனவுகளோடு நுழைந்த காலம். ஊர் உறவுகளைப் பிரிந்த சோகம் ஒரு பக்கம் கடும் வேலைப்பளு ஒரு பக்கம், துணி துவைப்பதிலிருந்து சமையல் செய்வது வரையான தேவைகளை சுயமாக செய்து கொள்ள வேண்டிய புதிய அனுபவங்கள் ஒரு பக்கம் என பல சோதனைகளுக்கு மத்தியில் ஒரு பெரும் சோதனையாக எங்களுக்கு அமைந்தது சென்னைவாசிகள் பேசிய செந்தமிழ்!

மற்ற விஷயங்களையெல்லாம் சகித்துக் கொண்ட எங்களால் சென்னைத் தமிழை மட்டும் ஜீரணிக்கவே முடியவில்லை பலநாட்களுக்கு. அதுவும் நாங்கள் முதன்முதலாக தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் சென்னையின் அடிமட்டத் தமிழில் மூழ்கி முத்தெடுத்தவர். வயது முதிர்ந்த தாத்தா வேறு.. அவர் எப்படி பேசியிருப்பார் என்பதை சொல்லவும் வேண்டுமா? அவர் பேசுவதில் ஏதோ இருபது சதவீத வார்த்தைகளே புரியும். மற்றவைகளை நாமே ஊகித்துக் கொள்ள வேண்டியதுதான். அதற்கே பலமுறை ஆங்.. ஆங்.. என்று கேட்க வேண்டும். எத்தனை முறை கேட்டாலும் அதே வேகத்தில்தான் பதில் வரும். சில நேரங்களில் அவர் பேசுவது புரியாமல் திருதிருவென விழிக்க 'ஏம்பா தமிழ் தெராதா உனுக்கு?' என்று கேட்பாரே பார்க்கலாம்!! அதுதான் கொடுமையின் உச்சக்கட்டம்.

இப்படி ஆரம்பக் காலத்தில் சென்னைத் தமிழின் மீதிருந்த கொலைவெறி சென்னைவாசிகளோடு பழகப் பழக கொஞ்சம் கொஞ்சமாகத் தணிந்தது. இப்பொழுது நெல்லைத் தமிழ், சென்னைத் தமிழ் மற்றும் நண்பர்களின் வேறுசில வட்டார வழக்கும் கலந்த பு(பொ)து மொழி பேசிக்கொண்டிருக்கிறோம். நெல்லைத் தமிழை நிலைநிறுத்தியே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிப் பேசிய ஒருசில நண்பர்களால் கூட சென்னைத் தமிழுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

சரி விஷயத்திற்கு வருவோம். தமிழ்நாட்டின் பிற வட்டார வழக்குத் தமிழையெல்லாம் விட சென்னை வட்டாரத் தமிழ் எப்படி இப்படி விநோதமானது என்பதைப் புரிந்து கொள்வது எளிது. வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்பது தமிழகத்தைவிட அதன் தலைநகருக்கு சாலப் பொருத்தமாக இருக்கும். அன்றைய ஆங்கிலேயர் முதல் இன்றைய வடஇந்தியத் தொழிலாளர்கள் வரை பலதரப்பட்ட மக்களுக்கும் அடைக்கலம் தந்து வாழ்வாதாரம் வழங்கிக் கொண்டிருக்கிறது சென்னை. இப்படி வந்தாரை வாழ வைத்தது மட்டுமல்லாமல் அவர்கள் கொண்டு வந்த மொழியையும் வாழ வைத்துக் கொண்டிருப்பதன் அடையாளம்தான் சென்னைத் தமிழ்.

சென்னைத் தமிழில் முக்கிய அங்கம் வகிப்பது ஆங்கிலம். இருக்காதா பின்னே? சென்னை நகரை செதுக்கிய சிற்பிகளாயிற்றே ஆங்கிலேயர்கள். அவர்கள் விட்டுச் சென்ற அடையாளங்கள் இல்லாமல் போய்விடுமா? சென்னையின் அடித்தட்டு மக்களிடத்தில் கூட ஆங்கில வார்த்தைகள் சாதாரணமாகப் புளங்கப்படுவதைக் காணலாம். இதில் சிறப்பு என்னவென்றால் ஆங்கில வார்த்தைகளை அப்படியே பயன்படுத்தாமல் தமிழுக்கேற்றார்போல் மாற்றியிருப்பார்கள். எப்படி இங்கிலீஷ் ஆங்கிலமாகியதோ அது போல. உதாரணத்திற்கு சில:
School - இஸ்கூலு
Hour - அவரு
Cement - சிமிட்டி
Kerosene oil - கிருஷ்ணாயில்
Upbeat - அப்பீட்டு

மண்ணெண்ணெய் எப்படி கிருஷ்ணாயில் ஆனது என்று ஆரம்பக்காலத்தில் நான் மண்டையைப் பிய்த்ததுண்டு. அடித்தட்டு மக்கள் பேசும் இந்த ஆங்கில சொல்லாடலை மேல் தட்டு மக்கள் ஏளனத்தோடு பார்க்கின்றனர். உண்மையில் இதில் நகைப்பதற்கு ஒன்றுமில்லை. பிற மொழி வார்த்தைகளை அவரவர் தாய்மொழிக்கேற்ப உள்வாங்கிக் கொள்வதென்பது உலக இயல்பு. அன்றைய ஆங்கிலேயர்களும் இதைத்தானே செய்தனர்.

எழும்பூர் என்று சொல்வதற்கு நாக்கு எழாமல் எக்மோர் என்றார்கள். திருவல்லிக்கேணியைத் திருத்தமாக சொல்ல முடியாமல் ட்ரிப்ளிக்கேன் ஆக்கினார்கள். பூவிருந்தவல்லி பூனமல்லி ஆனது. இப்படி ஆங்கிலேயர்கள் அரைகுறையாக மென்று துப்பிய வார்த்தைகளைத்தான் இன்றைய மேல்தட்டு மக்கள் நிறைந்த வாயோடு பெருமை பொங்க பேசி மகிழ்கிறார்கள். தமிழை வெறும் இணைப்புச் சொல்லாக மட்டுமே பேசும் இந்த ஆங்கில மோகிகளை விட, அடித்தட்டு சென்னைத் தமிழன் பேசும் வார்த்தைகள் எவ்வளவோ மேல்! (அப்பாடா.. ரொம்ப நாள் ஆசையைக் கொட்டித் தீர்த்தாச்சி.!)

அடுத்ததாக சென்னைத் தமிழின் ஓர் அங்கமாக உருது வார்த்தைகள் மிகுதியாக காணக் கிடைக்கின்றன.
படா பேஜார், கலீஜ், நாஷ்டா, டபாய்த்தல், மஜா, தாஜா, பேமானி, ஜல்ஸா, டங்குவார், உடான்ஸ், உதார்..... இப்படி நிறைய சொல்லலாம். சென்னையில் கணிசமாக உருது பேசுவோர் இருப்பதால் இவை சென்னைத் தமிழோடு கலந்திருக்கின்றன.

அதேபோல் தெலுங்கு பேசும் மக்களும் அதிகமிருப்பதால் தெலுங்கு வார்த்தைகளும் சென்னைத் தமிழோடு ஐக்கியமாகியிருக்கின்றன. நைனா, ஒத்து, காண்டு, டப்பு, புவா, கோசரம், பப்பு போன்ற வார்த்தைகளால் இதை அறியலாம்.

இவை மட்டுமின்றி ஹிந்தி, மராட்டி, பார்ஸி, அரபி போன்ற மொழிகளின் சில சொற்களும் சென்னைத் தமிழில் சங்கமித்திருக்கின்றன.

இவ்வாறு வந்த பிற மொழி வார்த்தைகளில் பெரும்பாலும் வசவு வார்த்தைளே அதிகமாக இருக்கின்றன. சென்னைவாசிகள் இரண்டு பேர் சண்டையிட்டுக் கொண்டால் தமிழ்நாட்டில் வேறெங்குமே கேட்க முடியாத வார்த்தைகளை காது நிரம்பக் கேட்கலாம். கஸ்மாலம், சோமாறி, பேமானி, கம்முனாட்டி.... இன்னும் எழுத முடியாத நிறைய வார்த்தைகள் உண்டு. யாரையாவது நேரடியாக திட்டித் தீர்க்க வேண்டுமெனில் அவர் அறியாத பாஷையில் திட்டுவதே சிறந்த வழிமுறையென்று அக்காலத்து சென்னைவாசிகள் கற்றிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

சென்னைத் தமிழ் பிறருக்கு அந்நியப் படுவதற்கு மற்றுமொரு காரணம் வேகமான உச்சரிப்பும் அதனால் சுருங்கும் வார்த்தைகளும் ஆகும். 'இதோ இங்கே இருக்குது பாருடா' என்று பிற வழக்கில் சொல்லி முடிப்பதற்குள் அதே அர்த்தத்தில் 'தோடா' என்ற இரண்டே எழுத்தில் சென்னைவாசி சொல்லி முடித்து விடுவான். இதே போல மேலும் சில உதாரணங்கள்

கூட்டிட்டு வா - இட்னு வா
அழகாக இருக்குது - ஷோகாக்கிது
உன்னோடதா - உன்தா
சாப்பிட்டாயா - துன்ட்டியா
பார்க்க/கேட்க சகிக்கல - ஐயே
சந்தேகப் படாதே - டவுட்டாத
கேழ்வரகு - கெவுரு

இது போல் பல வார்த்தைகள் சென்னையின் பரபரப்பான வாழ்க்கை முறைக்கேற்ப உருமாறியிருக்கிறது.

சென்னைத்தமிழ் என்றாலே இப்படி குப்பையும் கூவமுமாகத்தான் இருக்கும். நல்ல தமிழ் வார்த்தைகளையே அங்கே கேட்க முடியாது. சினிமாவைப் பார்த்து மட்டுமே சென்னைத் தமிழை அறிந்து வைத்திருப்பவர்கள் இப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சென்னைத் தமிழிலும் செந்தமிழ் வார்த்தைகள் இருக்கின்றன. தமிழுக்குப் பெருமை சேர்ப்பதில் பிற ஊர் மக்களுக்கு சென்னைவாசிகள் எவ்விதத்திலும் சளைத்தவர்களில்லை என்பதற்குப் பல உதாரணங்கள் கூறலாம். 13 ஆண்டுகள் சென்னையின் பூர்வீக மக்களோடுப் பழகியவன் என்ற முறையில் அவற்றில் சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதை என் கடமையாக நினைக்கிறேன்.

தமிழுக்கு சிறப்பு சேர்க்கும் எழுத்தாகிய 'ழ'கரத்தை சென்னைவாசிகளை விட வேறு எந்த வட்டாரத்திலும் இவ்வளவு அழுத்தமாக உச்சரித்து நான் கேட்டதில்லை. அதிக அழுத்தம் தர முடியாத ஒருசிலர் மட்டுமே ழவை யவாக்கி பழத்தை பயமாக்கி விடுகின்றனர்.

நிஜமாவா? சத்தியமாவா? என்று பிற ஊர்களில் வடமொழி வார்த்தைகளை பயன்படுத்திக் கொண்டிருக்க சென்னைவாசிகளோ மெய்யாலுமா என்று செந்தமிழில் பேசி மெய்சிலிர்க்க வைக்கிறார்கள்.

அருகில் எனப் பொருள்படும் 'அண்டை' என்னும் வார்த்தை சென்னைப் பேச்சு வழக்கில்தான் இன்னமும் இருக்கிறது.
உதாரணம்: வூட்டாண்ட, கடையாண்ட

வலி என்ற வார்த்தை வேதனை என்றே நாம் பொருள் கொள்கிறோம். இலக்கியங்களில் வலி என்ற வார்த்தை 'அதிக விசை கொடு' 'இழு' 'தள்ளு' போன்ற பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதை வைத்தே வலிமை வலிது போன்ற வார்த்தைகள் வழக்கில் வந்தது. ஆச்சரியகரமாக சென்னைத் தமிழில் மட்டுமே வலி என்ற சொல் இன்னமும் அதே பொருளில் பேசப்படுகிறது.
உம்: வலிச்சிக்கினு வா, துடுப்பு வலி

வலிக்குது என்று பிற ஊர்களில் சொல்வதை சென்னையில் நோவுது அழகு தமிழில் சொல்வார்கள்.

குந்து, அப்பால, கழனி, தொலவு(தொலைவு), சோத்துக்கை, திட்டமா(அளவாக), கா(ல்)வா(ய்)... இப்படி இன்னும் பல தூய சொற்கள் இருக்கின்றன.


சரி அதெல்லாம் போகட்டும். என்னதான் இருந்தாலும் ஊர்பக்கம் சொல்லுற மாதிரி பழமொழி சொலவடை எல்லாம் சென்னைப் பக்கம் கிடையாதே அப்படின்னு நினைக்கிறீங்களா? இதோ உங்களுக்காக சில

பஜார்ல உஷாரா இல்லன்னா
நிஜார உருவிடுவானுங்க

ஏண்டா எரடி(இடரி) விழுந்தேன்னா
இதுவும் ஒரு கரடி வித்தைன்னானாம்


கடைசியாக, சென்னைத்தமிழை மொழி, இன மற்றும் கலாச்சார நல்லிணக்கத்திற்கான அடையாளம் என்றால் அது மிகையாகாது. அதில் ஆச்சரியப்பட வேண்டிய ஆராயப்பட வேண்டிய நிறைய விஷயங்கள் உண்டு. நாமோ அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு எள்ளி நகைக்கிறோம். ஆனால் இந்த ஏளனத்தையெல்லாம் சென்னவாசி பொருட்படுத்துவதில்லை. 'கிளம்பு காத்து வரட்டும்' என்று பதில் சொல்லிவிட்டு தன் வேலையப் பார்ப்பான். இதன் பொருள் 'உன் வெட்டிப் பேச்சை நிறுத்தி விட்டு நீ கிளம்பினால் எனக்கு கொஞ்சம் நல்ல காற்றாவது கிடைக்கும்' என்பதாகும்.

குறிப்பு தந்து உதவிய நண்பர்கள்:
சக்திவேல்
தினேஷ்
செல்வம்


இம்மா நேரமா நம்ம பதிவ பொரிமையா படிச்சதுக்கு தேங்க்சுங்கோ.. அப்பால சொம்மா போவாம எதுனா கருத்து கிருத்து இருந்தா பீட்ரு வுடாம மேட்ரு ஒண்டி பின்னூட்டத்தில சொல்ட்டு போங்கப்பா.!