Wednesday, May 23, 2012

குடி முழுகிப் போச்சி!

அக்கம் பக்கம் வாங்கியத தீர்க்கல
அடகுக் கடையில் வச்சதயும் திருப்பல

சொத்து பத்து இருந்ததெல்லாம் இப்பயில்ல
சொந்தங்கொள்ள காணி நிலங்கூட இல்ல

சொந்தபந்தம் இருக்குறாங்க தூரத்தில
சொல்லிக்கொள்ள பக்கத்தில யாருமில்ல

அஞ்சு பத்து வச்சிருந்த காசையும்
அடிச்சு வாங்கி புடுங்கி போன புருஷனோ


எக்கச்சக்கம் குடிச்சதால போதையில
எழுந்திருக்க முடியாம வீதியில

கொஞ்சநஞ்சம் மிஞ்சிருந்த உசுரு கூட
குடி கொள்ள முடியாம முடிஞ்சு போக

அங்கயிங்க அலஞ்சி திரிஞ்சி
அழுதழுது வாங்கி வந்த பணத்துல

மிச்சமீதி சடங்குக்கொண்ணும் குறையில்ல
மிஞ்சியிருந்த அரிசி கூட புருசன் வாயில.!

Friday, May 18, 2012

கலைந்த மேகம்!

விழி குளிரும்
வெய்யில் ஒளிந்த
குற்றாலம்

விட்டு விட்டு
சாமரம் வீசும்
சாரல் காற்று

காற்றில்..
தவழ்ந்து தவழ்ந்து
மலையைத் தழுவும்
முகில்கள்

முகில்களை..
தாங்கித் தாங்கி
தரையிறக்கும் மலை

மலையில்..
விழுந்து விழுந்து
சிரிக்கும் அருவி

அருவியை..
குனிந்து குனிந்து
வரவேற்கும் தலை

Saturday, May 12, 2012

படாத பாடுபடும் தொழிலாளர்களும் பாட்டு பாடும் அமைச்சரும்.!

அண்மைக் காலமாக தமிழக சட்டமன்றத்தில் அமைச்சர்கள் போட்டி போட்டுக் கொண்டு அடிக்கும் கூத்துகள் நாம் அறிந்ததே. முன்னோடியாக நி(து)தி அமைச்சர் ஓ.பி. 'எங்களுக்கென்று சுயமாக சிந்தனை கிடையாது அம்மாவின் சிந்தனையே எங்கள் சிந்தனை' என்றெல்லாம் கூ(வி)றி அசத்தினார். பின்னர் கால்நடை துறை அமைச்சர் இன்னும் கீழிறங்கி யோசித்து 'கால்நடைகள் அம்மா அம்மா என்றே சொல்லும். அம்மாவைத் தவிர வேறொன்றும் தெரியாது அவைகளுக்கு. அத்துறையின் அமைச்சராகிய எனக்கும் அம்மாவைத் தவிர வேறொன்றும் தெரியாது' என்று உண்மையைப் போட்டு உடைத்தார்.

இந்த வரிசையில் நேற்று தொழிலாளர் நல வாரிய அமைச்சர் செல்லப் பாண்டியன் அம்மாவை மகிழ்விக்க எம்ஜியார் பாடல்களாகப் பாடி அமர்க்களப் படுத்தினார். தமிழகத்தில் பாடுபடும் தொழிலாள வர்க்கத்தினர் படும் பெரும்பாடு என்னவென்று உண்மையிலேயே அமைச்சர் அறிந்திருந்தால் இப்படி பாடியிருக்க மாட்டார்.
சாதாரண தொழிற்சாலையை விடுங்கள். நாங்கள்தான் கொண்டு வந்தோம் என்று இவர்கள் அடிக்கடி பீற்றிக் கொள்ளும் பன்னாட்டு நிறுவனங்களில் இன்றைய தொழிலாளர்களின் நிலைமை என்ன?

இத்தனை ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு இத்தனையாயிரம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பு என்று வக்கனையாக பேட்டி கொடுத்து திறந்து வைக்கப்படும் பன்னாட்டு நிறுவனங்களில் நிரந்தரப் பணியாளர்கள் மட்டும் எத்தனை பேர் என்பதை வெளிப்படையாகச் சொல்ல முடியுமா?

அப்ரண்டிஸ் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்ற பெயரில் நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டு ஆயிரக் கணக்கானோரின் உழைப்பு சுரண்டப்படுவது, ராகம்போட்டு கூவும் இந்த அமைச்சருக்குத் தெரியுமா?

கசக்கிப் பிழியப்படும் அந்த தொழிலாளர்களுக்கு கட்டிட வேலை பார்க்கும் சித்தாளுக்கு கிடைக்கும் ஊதியத்தை விட குறைவான ஊதியம் வழங்கப்படுவதும் அவர்களுக்கு சரியான உணவு கொடுக்கப்படுவதில்லை என்பதும் பணி நேரத்தில் நடக்கும் விபத்துகளுக்கு மருத்துவ வசதி கூட மறுக்கப்படுவதும் இந்த பாட்டுப் பாடி அமைச்சருக்குத் தெரியுமா?

நான்கு ஆண்டுகள் ஐந்து ஆண்டுகள் என தங்கள் ஆயுள் தேய உழைத்து, பணி நிரந்தரம் செய்வார்கள் என்று ஆசையோடு எதிர்பார்த்து கடைசி நாளில் 'நீ வேலைக்கு லாயக்கில்லை' என்று ஈவு இரக்கமின்றி பன்னாட்டு நிறுவனங்களால் விரட்டப்படும் தொழிலாளர்களின் கண்ணீர் கதையெல்லாம் இந்த 'சிங்கி' அமைச்சருக்குத் தெரியுமா?

என்றோ கிடைத்ததாக மேதினங்களில் நினைவு கூறப்படும் எட்டு மணி நேர வேலை என்ற உரிமை கூட பலருக்கு எட்டாக் கனியாக இருப்பதும் கால்கடுக்க நிற்கும் செக்யுரிட்டிகள் 12 மணி நேரம் வேலை வாங்கப்படும் கொடுமை இன்னமும் இங்கே நடந்து கொண்டிருப்பதும் சில மணி நேரம் நின்று புகழ்பாடும் அமைச்சருக்குத் தெரியுமா?

தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைக் காப்பதற்காக சட்டப்படி தொழிற்சங்கம் அமைத்தால் எவ்வளவு கீழ்த்தரமான பழிவாங்கல்களை இந்நிறுவனங்கள் அரங்கேற்றுகின்றன?

தமிழகத்தில் பெரும்பான்மைத் தொழிலாளர்கள் தொடங்கிய தொழிற்சங்கத்தை அங்கீகாரம் செய்த பன்னாட்டு நிறுவனம் ஏதாவது ஒன்றை சொல்ல முடியுமா?


தொழிற்சங்க அங்கீகார சட்டம் குறித்து எதிர்கட்சி உறுப்பினர் கேட்டதற்கு அமைச்சரி ன் பதில் என்ன தெரியுமா?
"1926ம் ஆண்டு தொழிற்சங்க உரிமைச் சட்டத்தில் அங்கீகாரம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. உறுப்பினர் கூறும் திருத்தத்தை அரசு ஆய்வு செய்யும்."

1926ம் ஆண்டு தொழிற்சங்க உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டதும் அதில் தொழிற்சங்கத்தை அங்கீரித்தேயாக வேண்டும் என்ற கட்டாயமில்லை என்ற ஓட்டை இருப்பதும் சாதாரண தொழிலாளிக்கும் தெரியும் உண்மை. முதல்வர் ஜெ. பாணியில் சொல்வதானால் இது போன்ற பாலபாடமெல்லாம் நீங்கள் நடத்த வேண்டாம். திராணி இருந்தால் மேற்குவங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இருப்பது போல தொழிற்சங்க அங்கீகாரச் சட்டம் இந்த ஆட்சியில் கட்டாயம் நிறைவேற்றப்படும் என்று சொல்ல முடியுமா மாண்புமிகு அமைச்சர் செல்லப் பாண்டியன் அவர்களே? முடியாது ஏனென்றால் நீங்கள் சுவிட்ச் போட்டால் பாட்டு பாடும் ஒலிப்பெருக்கி அவ்வளவுதான் இல்லையா?

பன்னாட்டு நிறுவன தொழிலாளர்களுக்கே இந்த கதியென்றால் சாதாரணப் பட்டறைகளில் நிலைமை எப்படியென்று சொல்ல வேண்டியதில்லை. இப்படி தொழிலாளர்கள் படாத பாடுபட்டுக் கொண்டிருக்க தொழிலாளர் நல அமைச்சர் நீங்களோ சட்டமன்றத்தை பாட்டு மன்றமாக்கி பாடக் கூடாத பாட்டையெல்லாம் பாடிக் கொண்டிருக்கிறீர்கள்.

மாண்புமிகு அமைச்சர் செல்லப் பாண்டியன் அவர்களே நீங்கள் பாட வேண்டும் என்று ஆசைப்பட்டால் புரட்சித் தலைவரின் படகோட்டி படத்தில் 'தரைமேல் பிறக்க வைத்தான்' என்ற பாடலுக்கு முன் தொடங்கும் பின்வரும் நான்கு வரிகளை எட்டுக் கட்டையில் உறக்கப் பாடுங்கள். அதுதான் மிக பொருத்தமாக இருக்கும்.

உலகத்தின் தூக்கம் கலையாதோ?
உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ?
உழைப்பவர் வாழ்க்கை மலராதோ?


ஒரு நாள் பொழுதும் புலராதோ?

Friday, May 4, 2012

இந்த காலத்திலுமா இப்படி?

மாவோயிஸ்ட்களிடமிருந்து அலெக்ஸ் மீட்கப்பட்டது, நித்தியானந்தா சர்ச்சை, சட்டமன்றத்தில் தேமுதிக-அதிமுகவினரின் களேகபரம் போன்ற செய்திகளின் ஆக்கிரமிப்புகளுக்கிடையில் இந்த செய்தியை பார்த்த போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. கல்வியறிவில் கரை கண்டுகொண்டிருக்கும் இக்காலத்திலும் இது போன்ற செய்திகளைக் கேள்விப்படும்போது வேதனையாகவும் பரிதாபமாகவும் இருக்கிறது.
அந்த செய்தி இதுதான்:

கோவையை அடுத்த வீரகேரளம் அருகேயுள்ள நாகராஜபுரத்தை சேர்ந்தவர் ராஜூ என்ற ராஜ்குமார் (வயது 25). கட்டிட தொழிலாளியான இவர் சுண்டக்காமுத்தூருக்கு கட்டிட வேலைக்காக சென்றார். அங்குள்ள ஒரு மருத்துவமனையின் பின்புறம் உள்ள ஒரு வீட்டில் இவர் கட்டிட வேலை செய்துகொண்டிருந்தார், மதியம் சாப்பாட்டு வேளையின் போது மருத்துவமனையின் பின்புறம் உள்ள காலி இடத்தில் ஒரு சாரைப்பாம்பும், நாகப்பாம்பும் ஆனந்தமாக பின்னிப் பிணைந்து நடனமாடிக் கொண்டிருந்தது. இந்த காட்சியை வேடிக்கை பார்க்க பொதுமக்கள் கூடிவிட்டனர். (நம்ம மக்களுக்கு சொல்லவா வேணும்? சுனாமி வருவதையே கிட்ட போய் வேடிக்கை பார்க்க ஆசைப்படுறவங்களாச்சே!)

அந்த கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஓர் ஆசாமி, 'இப்படி காமத்தில் மெய்மறந்து நடனமாடும் நல்லபாம்பிடம் வயிற்றில் ஒரு "முத்து" இருக்கும்' என்றொரு விஷக்கருத்தை கக்கியிருக்கிறார். இதை உண்மை என்று நம்பிய ராஜ்குமார் விஷப்பரீட்சையில் இறங்கியிருக்கிறார்.


ஓடிப்போய் பின்னிப் பிணைந்த இரண்டு பாம்பையும் வெறும் கையால் பிடித்து நாகப்பாம்பை விலக்கி தனியாக பிரித்துள்ளார்(அடப் பாவமே!!!). அப்போது, வெறி கொண்டிருந்த இரண்டு பாம்புகளுமே ராஜ்குமாரின் கையில் பல இடங்களில் வெறிதீர கடித்துள்ளது. வலி தாங்க முடியாத ராஜ்குமார் பாம்பை விட்டுவிட்டு கொஞ்ச தூரம் நடந்து வருவதற்குள் மயங்கி விழுந்துள்ளார். பக்கத்திலிருந்தவர்கள் உடனடியாக 108க்கு போன் செய்ய, மருத்துமனை போகும் வழியிலேயே வாயில் நுரை தள்ளி இறந்துள்ளார்.

யாரோ சொன்ன முட்டாள்தனத்தை நம்பி முத்தெடுக்கச் சென்ற ராஜ்குமார், எந்த முத்துகளாலும் வைர வைடூரியங்களாலும் ஈடு செய்ய இயலாத விலைமதிப்பற்ற தன் உயிரையே இழந்துள்ளது பரிதாபம். அவருக்கு மனைவியும் 7 மாத பெண் குழந்தையும் இருக்கிறதென்பது இன்னும் பரிதாபம்.


கிராமப்புரங்களில் இது போன்ற இன்னும் பல கதைகளைக் கேட்கலாம். சின்ன வயதில் எங்க ஊரில் நானும் இது மாதிரி நிறைய கதைகள் கேட்டிருக்கிறேன்.

நாகப் பாம்புகளில் சிலவகை இருக்கிறதாம். அவை விஷத்தை வெளியேற்றாமல் நூறாண்டுகளுக்கும் மேல் உயிர் வாழுமாம். இவ்வாறு பல ஆண்டுகளாக சேர்ந்த விஷம் திடப் பொருளாகி ஒளிவீசும் தன்மையுடையதாக மாறி விடுமாம். இதற்குப் பெயர்தான் ராஜ ரத்தினம்/மாணிக்கம் என்பதாம்.

இப்படி வாய்க்குள் ரத்தினத்தைப் பொத்தி வைத்திருக்கும் கிழட்டு நாகராஜாவுக்கு கண் பார்வை மங்கி விடுமாம். அமாவாசை தினத்தன்று இருள் அதிகமிருக்குமென்தால் இரை தேடுவதற்கு வசதியாக வாயிலிருக்கும் முத்தைக் கக்குமாம். அதன் வெளிச்சம் ரொம்ப தூரத்துக்கு இருப்பதால் நம்ம நாகராஜா இரை தேடிக்கிட்டு இருப்பாராம். இந்த தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நம்ம ஆள் கை நிறைய மாட்டு சாணத்தைக் கொண்டு போய் அந்த ரத்தினத்துக்கு மேல 'சொத்'துன்னு போட்டுட்டு வீட்டுக்கு வந்திடுவாராம். திடீர்னு பவர் கட் ஆனதும் நம்ம கிழட்டு நாகராஜா செய்வதறியாம தட்டுத் தடுமாறி எங்காவது முட்டி மோதி செத்துடுவார். அப்புறமென்ன நம்மாளு மறுநாள் போய் சாணத்தைக் கிளரி ரத்தினத்தை எடுத்து விற்று ஒரே நாளில் பணக்காரராகி விடுவார்.

ஊரிலுள்ள சில திடீர் பணக்காரர்களெல்லாம் இப்படி நாகரத்தினத்தால்தான் ஆனார்கள் என்று இந்தக் கதைக்கு வலு சேர்க்க சில ஆதாரங்களையும் காட்டுவார்கள். இந்த கதையை எல்லா ஊர்களிலும் நாம் கேள்விப்படலாம். ஆனால் நேரடியாகப் பார்த்தவர்கள் எவருமே இருக்க மாட்டார்கள். தத்ரூபமாக சொல்லப்படும் இது போன்ற கதைகள் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்து விடுகிறது. விளைவு.. மேற்கண்ட செய்தியில் கண்ட விபரீதம்!

அதே போல இன்னொரு கதை, அதாவது நல்ல பாம்பை அடித்தால் கொன்று எரித்தோ அல்லது புதைத்தோ விட வேண்டும் கூட பாலையும் ஊற்றி. தப்பித் தவறி அடிபட்ட பாம்பு உயிரை விடாமல் தப்பிவிட்டால் அவ்வளவுதான் உங்கள் கதை. நீங்கள் அமெரிக்கா சென்று ஒளிந்து கொண்டாலும் பழி வாங்காமல் விடாதாம்.

எங்க ஊர் பக்கம் ஒரு விநோதமான கூத்து நடக்கும். பச்சை பாம்பை பிடித்து பெண்களை கையால் உருவச் செய்வார்கள். இப்படி உருவினால் அவங்களுக்கு சமையல் பிரமாதமா வருமாம்!


இப்படி பாம்பு பற்றிய கதைகள் ஏராளம். முடிந்தால் இது பற்றி பிறகு பார்க்கலாம்.

Thursday, April 26, 2012

நினைவில் நிறைந்த கிராமத்து வீடு

இது
என் மழலைப் பருவத்தை
வசந்தமாக்கிய மாளிகை

சுகங்களை மட்டுமே
மனத்தில் நிறுத்திய
என் பிறந்த வீடு

விழுவது விழாமல் இருக்கத்தான்
அழுவது அழாமலிருக்கத்தான் எனும்
ஆரம்பப் பாடம் கற்றுத் தந்த
குருகுலம்

நிறைந்த மனமே
நிம்மதியின் இருப்பிடமென
அனுபவித்துத் தெரிந்த
ஆலயம்

நான்
கைக்குழந்தையாய் இருக்கையில்
கைமாறியதாம் இது
எங்கள் வீடாக
அம்மாவின் அணிகலன்கள்
அதற்கு ஈடாக

ஒரு வீடாய்த் தெரியும்
இது பெரியத்தாவுடையதும்
சேர்த்த இரு வீடு
இடையில் இருக்கவில்லை
இடைவெளி

முன்னே
பாய் நெய்யத் தறி போடுமளவு
திண்ணை

பின்னே
அம்மியும் அங்கணமும்
ஒரு பக்கம்
விறகடுப்பும் பாத்திரத் திண்டும்
மறு பக்கம்
ஊதுகுழலோடு அம்மா
உட்கார
இடையில் கொஞ்சம்
இடமுங் கொண்ட
அடுப்படி

மத்தியில்
வரவேற்பு அறை
படுக்கையறை படிப்பறை
உணவறை ஓய்வறை
எல்லாமுமாய் ஓர் அறை

மேலே
இரவல் ஏணியில் ஏறி
குறுக்கு வளைத்து
நெல் காயப் போட
மச்சி

முன்னால்
வேம்பும் முருங்கையும் நிழலிடும்
வீட்டைக் காட்டிலும்
விசாலமான முற்றம்

இவை
மற்றவர்கள் சொல்லும்
இந்த வீட்டின்
அளவீடுகள்

இந்தத் திண்ணைதான்
எத்தனை எத்தனைக்
கதைகள் கேட்டுருக்கும்?

அடுத்த தெரு
தண்ணிச் சண்டையிலிருந்து
அமெரிக்காவுக்கு சதாம்
தண்ணி காட்டியது வரை
இங்கே வாய் பிளந்து
கேட்ட அரட்டகள்தான் எத்தனை

மூலையில் இருக்கும்
அந்த ஆட்டுக்கல்
ஆட்டுவதை விட அமர்வதற்கே
அதிகம் பயன்பட்டிருக்கும்

அதோ
அந்த வாசல் நிலை
குழந்தைகளை மட்டுமே
நிமிர்ந்து வர அனுமதிக்கும்
பெரியவர்களை குனியச் செய்யும்
மறந்து நிமிர்ந்தால்
மறக்காமல் குட்டு வைக்கும்

இந்தக் கதவு
திறந்திருந்த காலங்களே
அதிகம்

இதன் திறவுகோல்
திறப்பதை காட்டிலும்
தேங்காய் உடைப்பதற்கே
தேவைப்பட்டது அதிகமாக

இந்தக் கதவில் ஆடிய
ஊஞ்சலின் சுகத்தை
எந்த ராட்டினம் தந்திருக்கும்?


வெய்யிற் காலம் நோன்பிருந்து
வெருந்தரையில்
சுருண்டு கிடந்ததும் இங்கேதான்

மழைக் காலம்
வடியும் நீர் பிடித்து
குடிநீராக்கியதும் இங்கேதான்

சிம்னி வெளிச்சத்தில்
சிலேட்டில் கோணலாக
வீட்டுப்பாடம் எழுதியதும்
இங்கேதான்

பின்னே
மின் இணைப்பு பெற்று
குழல் விளக்கெரிய
பெத்தா மூக்கில் விரல் வைத்ததும்
இங்கேதான்

பழைய சோறும்
அமிர்தமாய் தெரிய
பசித்து உண்டதும்
இங்கேதான்

வடக்குத் தெரு வரை
வாசம் செல்லும்
தேங்காய் சோறும் கறியானமும்
சேர்ந்து ருசிக்க
பெருநாள் கிடைத்ததும்
இங்கேதான்

பண்டம் கிடைத்தால்
பாகம் பிரித்து
பகிர்ந்து உண்டதும்
இங்கேதான்

சண்டை போட்டு
காலையில் பிரிந்து
மாலையில் சேரும்
உறவுகள் பெற்றதும்
இங்கேதான்

முன்னிரவு முற்றத்தில் பாய்விரித்து
அக்கா சொல்லும்
குருவிக் கதை கேட்டு
பாதியில் தூங்கியதும்
இங்கேதான்

அதிகாலையில் தொழ
அலாரம் இன்றி
அம்மா விழித்து
எழுப்பி விட்டதும்
இங்கேதான்


ஏழாம் வகுப்பில்
ஊரைப் பிரிந்து சென்றபோது
பிரிவின் வலியை
முதலில் உணர்த்தியதும்
இந்த வீடுதான்

எந்திரலோகச் சென்னையில்
வாடகைக் கொள்ளையரிடம் சிக்கி
வசவு கேட்ட போதெல்லாம்
திரும்பிடலாமா ஊருக்கு என
நினைக்க வைத்ததும்
இதே வீடுதான்

பின்னாளில்
பளிங்குத் தரையும்
குளிரும் அறையுமாக
சொந்த வீடு கட்டியும்
மீட்க முடியாத
அமைதியைத் தந்ததும்
இந்த வீடு மட்டுமேதான்


மழைக் காலம்
வரும் போதெல்லாம்
ஞாபகப்படுத்தும் இந்த
மண் மாளிகை
காலாவதியைக் கடந்து விட்டதை

இனி செப்பனிட ஏதுமில்லை
தானாய் விழும் முன்
நாமாய் இடிப்பது நல்லதென
கொத்தனார் நாள் குறிக்க

மனதைக் கல்லினும் கல்லாக்கி
இந்த மண் மாளிகையை
மண்ணோடு மண்ணாக்கிய போது
கண்களில் பொங்கிய நீருக்கு
கரையிட முடியவில்லை!

இடிபடும் முன்னால் இல்லை
விடைபெறும் முன்னால்
நோக்கியாவின் தயவில்
முதலும் கடைசியுமாய்
எடுத்த படங்கள் மட்டுமே மிச்சமாய்

இறைவன் நாடினால்...
நாளை நானிருந்தால்..
வேண்டா வெறுப்பாய் கேட்டாலும்
என் விழுதுகளுக்கு
விளக்கிச் சொல்வேன்
என் வேர்கள்
இந்த மண்ணிலிருந்துதான்
புறப்பட்டனவென்று.!

சடங்கு.!

எவரேனும் ஒருவர்
தோள் கொடுத்திருந்தால் போதும்..
அவர்
சாய்ந்திருக்க மாட்டார்
இதோ
இப்பொழுது நான்கு தோள்கள்
அவரைச் சுமக்கின்றன.!

ஏதேனும் ஒரு விழி
இரக்கப் பார்வை
வீசியிருந்தால் கூடப்போதும்
அவர்
வாழ்ந்திருக்கக் கூடும்
இதோ
இப்பொழுது எத்தனையோ விழிகள்
கண்ணீர் வடிக்கின்றன!

யாரேனும் ஒருவர்
வழி காட்டியிருந்தால்
அவர் பயணம்
முடிந்து போயிருக்காது
இதோ
இப்பொழுது எத்தனையோ பேர்
வழியனுப்ப வந்திருக்கிறார்கள்!

வயிற்றுக்கு கஞ்சி கிடைக்காதவர்
வாய்க்கு மட்டும்
இன்று அரிசியும் பாலும்!

வறுமையில் வாடி
உதிர்ந்தவர்
இதோ இங்கே
பூத்துக் கிடக்கிறார்
மாலைகளால்!

நடந்த காலங்களில்
அவருக்கு
வழி தராதவர்கள்
இதோ
இப்பொழுது வீதியெங்கும்
மலர் தூவுகிறார்கள்..
பாவம் அவர் பாதங்களோ
பாடையில்!

Thursday, April 5, 2012

'கூவல் திலகம்' - ஓ.பன்னீர்செல்வம்!

சினிமாவில் வரும் நகைச்சுவைக் காட்சி ஒன்றில் லிவிங்ஸ்டனைப் புகழ்ந்து தள்ளுவதற்காக வடிவேலு காசு கொடுத்து ஆட்களை நியமிக்க அதில் ஒருவர் 'வருங்கால ஜனாதிபதி' என்று சொல்வார். உடனே லிவிங்ஸ்டன் 'ங்கொய்யால.. இவன் நல்லா கூவுறாண்டா.. கூவல் திலகம்டா' என்று சொல்லிக் கொண்டே பாக்கெட்டிலிருந்து பணத்தைக் கொடுத்து 'அடுத்த முறை இன்னும் நல்லா கூவணும்' என்று சொல்ல அவரும் அடுத்த முறை 'வருங்கால அமெரிக்க ஜனாதிபதி முருகேசன் வாழ்க' என்பார்.

இது போன்ற காட்சிகளை சினிமாவில் வேண்டுமானால் பார்த்து வயிறு குலுங்க சிரிக்கலாம். ஆனால் தமிழக சட்டமன்றத்தில் அமைச்சர்கள் ஆளாளுக்கு போட்டி போட்டுக் கொண்டு இப்படிக் கூவிக் கொண்டிருந்தால் பார்க்கும் மக்களுக்கு வயிற்றெரிச்சலும் ஆத்திரமும்தான் வருகிறது.

அண்மைக் காலமாக சட்டமன்ற நிகழ்வுகளைப் பார்க்கவே எரிச்சலாக உள்ளது. அதுவும் நிதி அமைச்சரின் துதி பாடலுக்கு ஓர் அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. அம்மாவுக்கு பன்னீர் அபிஷேகம் செய்வதில் தனக்கு நிகர் தானே என்று தொடர்ந்து நிரூபித்து வருகிறார். பட்ஜெட் உரையின் போது அதிகபட்சமாக அம்மாவை உச்சரித்து சாதனை படைத்த அவர், இன்று(05/04/2012) பட்ஜெட் மீதான பொது விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய போது,

"பூகோள பாடத்தில் வேண்டுமானால் இந்தியாவின் தலைநகர் டெல்லி என்று இருக்கலாம். ஆனால், அரசியல் வரைபடத்தில் இந்தியாவின் தலைநகர் இனி சென்னை தான். இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போவது புரட்சித் தலைவி அம்மா தான்.

எங்களுக்கென்று தனி சொந்தம் இல்லை. அம்மாவின் சொந்தமே எங்கள் சொந்தம். எங்களுக்கென்று தனி நட்பு இல்லை. அம்மாவின் நட்பே எங்கள் நட்பு.

எங்களுக்கென்று தனி சிந்தனை இல்லை. அம்மாவின் சிந்தனையே எங்கள் செயல். எங்களுக்கென்று தனி வழி இல்லை. அம்மாவின் வழியே எங்கள் வழி.

அம்மாவுக்கு எங்கள் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் சமர்பிப்போம்"

என்று கூறு(வு)வதையும் அதற்கு அதிமுகவினர் விண்முட்ட மேசையைத் தட்டுவதையும் கேட்டு முதல்வர் முகத்தில் வேண்டுமானால் புன்னகை தவழலாம். ஆனால் மக்கள் முகம் சுழிப்பது இந்த மங்குனி அமைச்சர்களுக்கு எங்கே புரியப் போகிறது?

வெளியில் எப்படி வேண்டுமானாலும் புகழ்பாடுங்கள் இல்லை காலில் விழுங்கள் இல்லை நெடுஞ்சாண் கிடையாக அங்கப் பிரதட்சணமே கூட செய்யுங்கள் யார் கேட்கப் போகிறார்கள்? ஆனால் சட்டமன்றத்தில் நீங்கள் நிற்பது மக்கள் தந்த அங்கீகாரம். அங்கே நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ஆக்கப்பூர்மானதாக இருக்க வேண்டும். நீங்கள் புகழ்பாடுவதற்கும் அல்லது வேண்டாதவர்களை வசைபாடுவதற்குமான இடம் அல்ல சட்டமன்றம். உங்கள் கண்ணியத்தையும் உங்களுக்கான அதிகாரத்தையும் இழக்கலாமா? நீங்கள் பதவி ஏற்கும்போது எடுத்த உறுதிமொழி நினைவில் இருக்கிறதா அமைச்சர்களே?

"தமிழ்நாட்டு அரசின் அமைச்சராக உண்மையாகவும், உளச்சான்று படியும் எனது கடமைகளை செய்வேன் என்றும் அரசியல் அமைப்புக்கும் சட்டத்துக்கும் இணங்க, அச்சமும் ஒருதலை சார்பும் இன்றி, விருப்பு - வெறுப்பை விலக்கி, பல தரப்பட்ட மக்கள் அனைவருக்கும் நேர்மையானதை செய்வேன் என்று ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி மொழிகிறேன்"

என்று ஆண்டவன் மீது ஆணையிட்டு பதவியேற்ற நீங்கள் எங்களுக்கென்று சுயமான சிந்தனை கிடையாது மூளை கிடையாது முதுகெலும்பு கிடையாது என்றெல்லாம் சொல்வதற்கு வெட்கப் பட வேண்டாமா?

மாண்புமிகு முதல்வர் அவர்கள் இது போன்ற விஷயங்களைத் தடுக்க தொண்டர்களுக்கு ஒரே ஓர் ஆணையிட்டு இந்த புகழ்பாடலுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாமே! உங்கள் ஆட்சி முறையையும் நிர்வாகத் திறமையையும் மக்கள் புகழ வேண்டும். அதுதான் உண்மையான அங்கீகாரம். அதை விடுத்து உங்களுக்கு நீங்களே ஓயாமல் புகழ்பாடிக் கொண்டிருந்தால் மக்களிடம் வெறுப்பை சம்பாதிப்பதைத் தவிர வேறு எந்த பலனும் இல்லை. தனக்குத் தானே சிலை வைத்துக் கொண்டவரின் நிலை உ.பி.யில் என்னவானது என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

கடைசியாக, அமைச்சர்களே அரசியல்வாதிகளே, என்னைப் போன்றவர்களுக்கெல்லாம் சட்டமன்றத்தை விமர்சிக்கும் அளவுக்கு தகுதியை மீண்டும் ஏற்படுத்தித் தராதீர்கள்!

Monday, April 2, 2012

என்னைக் கவர்ந்த சென்னைத் தமிழ்

அது 1999ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம். சொந்த ஊரான திருநெல்வேலியிலிருந்து பணி நிமித்தம் சென்னைக்கு பலவித கனவுகளோடு நுழைந்த காலம். ஊர் உறவுகளைப் பிரிந்த சோகம் ஒரு பக்கம் கடும் வேலைப்பளு ஒரு பக்கம், துணி துவைப்பதிலிருந்து சமையல் செய்வது வரையான தேவைகளை சுயமாக செய்து கொள்ள வேண்டிய புதிய அனுபவங்கள் ஒரு பக்கம் என பல சோதனைகளுக்கு மத்தியில் ஒரு பெரும் சோதனையாக எங்களுக்கு அமைந்தது சென்னைவாசிகள் பேசிய செந்தமிழ்!

மற்ற விஷயங்களையெல்லாம் சகித்துக் கொண்ட எங்களால் சென்னைத் தமிழை மட்டும் ஜீரணிக்கவே முடியவில்லை பலநாட்களுக்கு. அதுவும் நாங்கள் முதன்முதலாக தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் சென்னையின் அடிமட்டத் தமிழில் மூழ்கி முத்தெடுத்தவர். வயது முதிர்ந்த தாத்தா வேறு.. அவர் எப்படி பேசியிருப்பார் என்பதை சொல்லவும் வேண்டுமா? அவர் பேசுவதில் ஏதோ இருபது சதவீத வார்த்தைகளே புரியும். மற்றவைகளை நாமே ஊகித்துக் கொள்ள வேண்டியதுதான். அதற்கே பலமுறை ஆங்.. ஆங்.. என்று கேட்க வேண்டும். எத்தனை முறை கேட்டாலும் அதே வேகத்தில்தான் பதில் வரும். சில நேரங்களில் அவர் பேசுவது புரியாமல் திருதிருவென விழிக்க 'ஏம்பா தமிழ் தெராதா உனுக்கு?' என்று கேட்பாரே பார்க்கலாம்!! அதுதான் கொடுமையின் உச்சக்கட்டம்.

இப்படி ஆரம்பக் காலத்தில் சென்னைத் தமிழின் மீதிருந்த கொலைவெறி சென்னைவாசிகளோடு பழகப் பழக கொஞ்சம் கொஞ்சமாகத் தணிந்தது. இப்பொழுது நெல்லைத் தமிழ், சென்னைத் தமிழ் மற்றும் நண்பர்களின் வேறுசில வட்டார வழக்கும் கலந்த பு(பொ)து மொழி பேசிக்கொண்டிருக்கிறோம். நெல்லைத் தமிழை நிலைநிறுத்தியே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிப் பேசிய ஒருசில நண்பர்களால் கூட சென்னைத் தமிழுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

சரி விஷயத்திற்கு வருவோம். தமிழ்நாட்டின் பிற வட்டார வழக்குத் தமிழையெல்லாம் விட சென்னை வட்டாரத் தமிழ் எப்படி இப்படி விநோதமானது என்பதைப் புரிந்து கொள்வது எளிது. வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்பது தமிழகத்தைவிட அதன் தலைநகருக்கு சாலப் பொருத்தமாக இருக்கும். அன்றைய ஆங்கிலேயர் முதல் இன்றைய வடஇந்தியத் தொழிலாளர்கள் வரை பலதரப்பட்ட மக்களுக்கும் அடைக்கலம் தந்து வாழ்வாதாரம் வழங்கிக் கொண்டிருக்கிறது சென்னை. இப்படி வந்தாரை வாழ வைத்தது மட்டுமல்லாமல் அவர்கள் கொண்டு வந்த மொழியையும் வாழ வைத்துக் கொண்டிருப்பதன் அடையாளம்தான் சென்னைத் தமிழ்.

சென்னைத் தமிழில் முக்கிய அங்கம் வகிப்பது ஆங்கிலம். இருக்காதா பின்னே? சென்னை நகரை செதுக்கிய சிற்பிகளாயிற்றே ஆங்கிலேயர்கள். அவர்கள் விட்டுச் சென்ற அடையாளங்கள் இல்லாமல் போய்விடுமா? சென்னையின் அடித்தட்டு மக்களிடத்தில் கூட ஆங்கில வார்த்தைகள் சாதாரணமாகப் புளங்கப்படுவதைக் காணலாம். இதில் சிறப்பு என்னவென்றால் ஆங்கில வார்த்தைகளை அப்படியே பயன்படுத்தாமல் தமிழுக்கேற்றார்போல் மாற்றியிருப்பார்கள். எப்படி இங்கிலீஷ் ஆங்கிலமாகியதோ அது போல. உதாரணத்திற்கு சில:
School - இஸ்கூலு
Hour - அவரு
Cement - சிமிட்டி
Kerosene oil - கிருஷ்ணாயில்
Upbeat - அப்பீட்டு

மண்ணெண்ணெய் எப்படி கிருஷ்ணாயில் ஆனது என்று ஆரம்பக்காலத்தில் நான் மண்டையைப் பிய்த்ததுண்டு. அடித்தட்டு மக்கள் பேசும் இந்த ஆங்கில சொல்லாடலை மேல் தட்டு மக்கள் ஏளனத்தோடு பார்க்கின்றனர். உண்மையில் இதில் நகைப்பதற்கு ஒன்றுமில்லை. பிற மொழி வார்த்தைகளை அவரவர் தாய்மொழிக்கேற்ப உள்வாங்கிக் கொள்வதென்பது உலக இயல்பு. அன்றைய ஆங்கிலேயர்களும் இதைத்தானே செய்தனர்.

எழும்பூர் என்று சொல்வதற்கு நாக்கு எழாமல் எக்மோர் என்றார்கள். திருவல்லிக்கேணியைத் திருத்தமாக சொல்ல முடியாமல் ட்ரிப்ளிக்கேன் ஆக்கினார்கள். பூவிருந்தவல்லி பூனமல்லி ஆனது. இப்படி ஆங்கிலேயர்கள் அரைகுறையாக மென்று துப்பிய வார்த்தைகளைத்தான் இன்றைய மேல்தட்டு மக்கள் நிறைந்த வாயோடு பெருமை பொங்க பேசி மகிழ்கிறார்கள். தமிழை வெறும் இணைப்புச் சொல்லாக மட்டுமே பேசும் இந்த ஆங்கில மோகிகளை விட, அடித்தட்டு சென்னைத் தமிழன் பேசும் வார்த்தைகள் எவ்வளவோ மேல்! (அப்பாடா.. ரொம்ப நாள் ஆசையைக் கொட்டித் தீர்த்தாச்சி.!)

அடுத்ததாக சென்னைத் தமிழின் ஓர் அங்கமாக உருது வார்த்தைகள் மிகுதியாக காணக் கிடைக்கின்றன.
படா பேஜார், கலீஜ், நாஷ்டா, டபாய்த்தல், மஜா, தாஜா, பேமானி, ஜல்ஸா, டங்குவார், உடான்ஸ், உதார்..... இப்படி நிறைய சொல்லலாம். சென்னையில் கணிசமாக உருது பேசுவோர் இருப்பதால் இவை சென்னைத் தமிழோடு கலந்திருக்கின்றன.

அதேபோல் தெலுங்கு பேசும் மக்களும் அதிகமிருப்பதால் தெலுங்கு வார்த்தைகளும் சென்னைத் தமிழோடு ஐக்கியமாகியிருக்கின்றன. நைனா, ஒத்து, காண்டு, டப்பு, புவா, கோசரம், பப்பு போன்ற வார்த்தைகளால் இதை அறியலாம்.

இவை மட்டுமின்றி ஹிந்தி, மராட்டி, பார்ஸி, அரபி போன்ற மொழிகளின் சில சொற்களும் சென்னைத் தமிழில் சங்கமித்திருக்கின்றன.

இவ்வாறு வந்த பிற மொழி வார்த்தைகளில் பெரும்பாலும் வசவு வார்த்தைளே அதிகமாக இருக்கின்றன. சென்னைவாசிகள் இரண்டு பேர் சண்டையிட்டுக் கொண்டால் தமிழ்நாட்டில் வேறெங்குமே கேட்க முடியாத வார்த்தைகளை காது நிரம்பக் கேட்கலாம். கஸ்மாலம், சோமாறி, பேமானி, கம்முனாட்டி.... இன்னும் எழுத முடியாத நிறைய வார்த்தைகள் உண்டு. யாரையாவது நேரடியாக திட்டித் தீர்க்க வேண்டுமெனில் அவர் அறியாத பாஷையில் திட்டுவதே சிறந்த வழிமுறையென்று அக்காலத்து சென்னைவாசிகள் கற்றிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

சென்னைத் தமிழ் பிறருக்கு அந்நியப் படுவதற்கு மற்றுமொரு காரணம் வேகமான உச்சரிப்பும் அதனால் சுருங்கும் வார்த்தைகளும் ஆகும். 'இதோ இங்கே இருக்குது பாருடா' என்று பிற வழக்கில் சொல்லி முடிப்பதற்குள் அதே அர்த்தத்தில் 'தோடா' என்ற இரண்டே எழுத்தில் சென்னைவாசி சொல்லி முடித்து விடுவான். இதே போல மேலும் சில உதாரணங்கள்

கூட்டிட்டு வா - இட்னு வா
அழகாக இருக்குது - ஷோகாக்கிது
உன்னோடதா - உன்தா
சாப்பிட்டாயா - துன்ட்டியா
பார்க்க/கேட்க சகிக்கல - ஐயே
சந்தேகப் படாதே - டவுட்டாத
கேழ்வரகு - கெவுரு

இது போல் பல வார்த்தைகள் சென்னையின் பரபரப்பான வாழ்க்கை முறைக்கேற்ப உருமாறியிருக்கிறது.

சென்னைத்தமிழ் என்றாலே இப்படி குப்பையும் கூவமுமாகத்தான் இருக்கும். நல்ல தமிழ் வார்த்தைகளையே அங்கே கேட்க முடியாது. சினிமாவைப் பார்த்து மட்டுமே சென்னைத் தமிழை அறிந்து வைத்திருப்பவர்கள் இப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சென்னைத் தமிழிலும் செந்தமிழ் வார்த்தைகள் இருக்கின்றன. தமிழுக்குப் பெருமை சேர்ப்பதில் பிற ஊர் மக்களுக்கு சென்னைவாசிகள் எவ்விதத்திலும் சளைத்தவர்களில்லை என்பதற்குப் பல உதாரணங்கள் கூறலாம். 13 ஆண்டுகள் சென்னையின் பூர்வீக மக்களோடுப் பழகியவன் என்ற முறையில் அவற்றில் சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதை என் கடமையாக நினைக்கிறேன்.

தமிழுக்கு சிறப்பு சேர்க்கும் எழுத்தாகிய 'ழ'கரத்தை சென்னைவாசிகளை விட வேறு எந்த வட்டாரத்திலும் இவ்வளவு அழுத்தமாக உச்சரித்து நான் கேட்டதில்லை. அதிக அழுத்தம் தர முடியாத ஒருசிலர் மட்டுமே ழவை யவாக்கி பழத்தை பயமாக்கி விடுகின்றனர்.

நிஜமாவா? சத்தியமாவா? என்று பிற ஊர்களில் வடமொழி வார்த்தைகளை பயன்படுத்திக் கொண்டிருக்க சென்னைவாசிகளோ மெய்யாலுமா என்று செந்தமிழில் பேசி மெய்சிலிர்க்க வைக்கிறார்கள்.

அருகில் எனப் பொருள்படும் 'அண்டை' என்னும் வார்த்தை சென்னைப் பேச்சு வழக்கில்தான் இன்னமும் இருக்கிறது.
உதாரணம்: வூட்டாண்ட, கடையாண்ட

வலி என்ற வார்த்தை வேதனை என்றே நாம் பொருள் கொள்கிறோம். இலக்கியங்களில் வலி என்ற வார்த்தை 'அதிக விசை கொடு' 'இழு' 'தள்ளு' போன்ற பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதை வைத்தே வலிமை வலிது போன்ற வார்த்தைகள் வழக்கில் வந்தது. ஆச்சரியகரமாக சென்னைத் தமிழில் மட்டுமே வலி என்ற சொல் இன்னமும் அதே பொருளில் பேசப்படுகிறது.
உம்: வலிச்சிக்கினு வா, துடுப்பு வலி

வலிக்குது என்று பிற ஊர்களில் சொல்வதை சென்னையில் நோவுது அழகு தமிழில் சொல்வார்கள்.

குந்து, அப்பால, கழனி, தொலவு(தொலைவு), சோத்துக்கை, திட்டமா(அளவாக), கா(ல்)வா(ய்)... இப்படி இன்னும் பல தூய சொற்கள் இருக்கின்றன.


சரி அதெல்லாம் போகட்டும். என்னதான் இருந்தாலும் ஊர்பக்கம் சொல்லுற மாதிரி பழமொழி சொலவடை எல்லாம் சென்னைப் பக்கம் கிடையாதே அப்படின்னு நினைக்கிறீங்களா? இதோ உங்களுக்காக சில

பஜார்ல உஷாரா இல்லன்னா
நிஜார உருவிடுவானுங்க

ஏண்டா எரடி(இடரி) விழுந்தேன்னா
இதுவும் ஒரு கரடி வித்தைன்னானாம்


கடைசியாக, சென்னைத்தமிழை மொழி, இன மற்றும் கலாச்சார நல்லிணக்கத்திற்கான அடையாளம் என்றால் அது மிகையாகாது. அதில் ஆச்சரியப்பட வேண்டிய ஆராயப்பட வேண்டிய நிறைய விஷயங்கள் உண்டு. நாமோ அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு எள்ளி நகைக்கிறோம். ஆனால் இந்த ஏளனத்தையெல்லாம் சென்னவாசி பொருட்படுத்துவதில்லை. 'கிளம்பு காத்து வரட்டும்' என்று பதில் சொல்லிவிட்டு தன் வேலையப் பார்ப்பான். இதன் பொருள் 'உன் வெட்டிப் பேச்சை நிறுத்தி விட்டு நீ கிளம்பினால் எனக்கு கொஞ்சம் நல்ல காற்றாவது கிடைக்கும்' என்பதாகும்.

குறிப்பு தந்து உதவிய நண்பர்கள்:
சக்திவேல்
தினேஷ்
செல்வம்


இம்மா நேரமா நம்ம பதிவ பொரிமையா படிச்சதுக்கு தேங்க்சுங்கோ.. அப்பால சொம்மா போவாம எதுனா கருத்து கிருத்து இருந்தா பீட்ரு வுடாம மேட்ரு ஒண்டி பின்னூட்டத்தில சொல்ட்டு போங்கப்பா.!

Tuesday, March 20, 2012

நூதன போதையின் பிடியில் மாணவ சமுதாயம்!

மாலை நேர திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் பரபரப்போடு இயங்கிக் கொண்டிருந்தது. பேட்டை செல்வதற்கான பேருந்தை எதிர்பார்த்தபடி நின்றுருந்தேன். கொஞ்ச நேரத்தில் சுத்தமல்லி பஸ் ஆடி அசைந்து உள்ளே நுழைந்தது. நிற்பதற்கு முன்னாலேயே மக்கள் கூட்டம் மொய்க்க ஆரம்பித்து விட்டது.

"மொதல்ல எறங்குதவுங்களுக்கு வழிய விடுங்கப்பா.." உள்ளிருந்து வந்த குரலையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் முண்டியடித்து நுழைந்தார்கள் சிலர். இன்னொரு பக்கம் ஜன்னல் வழியாக இருக்கைக்கு முன்பதிவு செய்வதில் மும்மரமாயிருந்தனர் சிலர். மாலை நேரமென்பதால் மாணவர்கள் கூட்டம் அதிகமாயிருந்தது.

ஒருவழியாக மல்லுக்கட்டி ஏறியதில் கடைசி இருக்கையில் இடம் கிடைத்தது எனக்கு.

"எத்துன பஸ்ஸு வுட்டாலும் காண மாட்டுக்கு.. இந்த பேட்டை ஊருக்கு மட்டும் எங்க கெடந்துதான் வருமோ இவ்வளவு கூட்டம்"
பெருமூச்சு விட்டபடி புலம்பினார் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெரியவர்.

"அண்ணே.. இந்த பேக்க கொஞ்ச நேரம் வச்சிருங்கண்ணே"
நின்று கொண்டிருந்த ஒரு மாணவன் தன் புத்தகச் சுமையை என் மடியில் இறக்கி வைத்துவிட்டு தன் சகாக்களோடு அரட்டையைத் தொடர்ந்தான்.

ஹாரன் சத்தங்கள் அலர பேருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஊர்ந்து பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்தது. கண்டக்டரிடம் பேட்டை ரொட்டிக்கடை ஸ்டாப்பிற்கான பயணச்சீட்டு வாங்கி பையில் திணித்துக் கொண்டேன். இடது பக்கமிருந்த ஒரு மாணவன், ஏறக்குறைய 14 அல்லது 15 வயது இருக்கலாம் ஏதோ வித்தியாசமாக செய்துகொண்டிருந்தான். அவன் கையில் இருந்த கைக்குட்டையை சுருட்டு போல உருட்டியிருந்தான். நுனிப்பகுதியில் ஏதோ ஈரமாகத் தெரிந்தது. அவ்வப்போது அதை மூக்கிலும் வாய்க்குள்ளும் வைத்து உறிஞ்சிக் கொண்டிருந்தான். எனக்கு சந்தேகமாக இருந்தது.

ஏழெட்டு உறிஞ்சுகளுக்குப் பிறகு பேன்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு சிறிய பாட்டிலை எடுத்து திறந்து அதிலிருந்த அந்த திரவத்தை கைக்குட்டையின் நுனிப் பகுதியில் ஊற்றினான். பிறகு மீண்டும் உறிஞ்சுதலைத் தொடர்ந்தான். நான் சந்தேகித்தது சரியாக இருந்தது. இது தொடர்பாக செய்திகளில் பத்திரிக்கைகளில் ஏற்கனவே பார்த்திருந்ததால் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் இது மிக மோசமான விஷயமாயிற்றே? இதை எப்படி இவன் பொது இடத்தில் ஒளிவுமறைவில்லாமால் சர்வ சாதாரணமாக செய்து கொண்டிருக்கிறான் என்று எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

பக்கத்தில் நின்று கொண்டிருந்த நடுத்தர வயதுடைய அந்த மனிதருக்கும் புரிந்திருக்கும் போல.
அவர் அவனைப் பார்த்து,

"ஏம்ல படிக்குத வயசுல இப்புடி கெட்டு கீவழியாப் போறீங்க? இதுக்கா ஒங்க வீட்ல அப்பா அம்மா பள்ளிக்கூடத்துக்கு அனுப்புதாங்க"
என்று கொஞ்சம் வேகமாகக் கேட்டார்.

"அது ஒண்ணுமில்லண்ணே சும்மாதான்..."
செயற்கையாக புன்னகைத்துக் கொண்டே சொன்னான்.

"நீ என்ன செய்தன்னு எனக்கு நல்லாத் தெரியும். இப்பமே இப்புடி இருந்தா நீங்கள்ளாம் பின்னாடி வாழ்க்கயில எப்புடில முன்னேறுவிய"
அவர் ஆதங்கத்தோடு சொன்னார்.

"இல்லண்ணே மனசு கஷ்டமா இருக்குண்ணே அதான்..." என்றான்

"இந்த வயசுல ஒங்களுக்கெல்லாம் அப்புடி என்னதான் கஷ்டமோ.. எப்படியோ நாசமாப் போங்க"
என்றார் வெறுப்போடு.

அந்த மாணவன் செய்து கொண்டிருந்தது பற்றி அநேகமாக உங்களுக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். தெரியாதவர்களுக்கு சொல்லி விடுகிறேன்.

பேப்பரில் தவறாக எழுதியதையோ பிரிண்ட் செய்யப்பட்டதையோ அழிப்பதற்கு பயன்படுத்தும் பொருள் ஒயிட்னர் எனப்படும். இதை வைத்துதான் மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை அழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் இதுதான் உண்மை. ஒயிட்னரை கர்ச்சீப்பில் ஊற்றி நுகரும் போது அதன் நெடியில் ஒருவித போதை மயக்கம் ஏற்படுகிறதாம். அண்மைக் காலமாக தமிழக இளைஞர்கள் குறிப்பாக பள்ளி மாணவர்கள் இப்பழக்கத்திற்கு அடிமையாவது அதிகரித்து வருகிறதாம்.

இதுமட்டுமின்றி பெட்ரோல், பஞ்சர் ஒட்டும் பேஸ்ட், நக பாலிஷ், பெயிண்ட்.... என மாணவர்களின் சுவாச போதை வஸ்துகளின் கண்டுபிடிப்புப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இவற்றில், மலிவாகக் கிடைப்பதாலும் யாருக்கும் சந்தேகம் ஏற்படுத்தாது என்பதாலும் ஒயிட்னர் முதலிடம் வகிக்கிறது. அதேபோல் உடல் மன ரீதியாக பாதிப்பு ஏற்படுத்துவதிலும் இந்த ஒயிட்னருக்குத்தான் முதலிடம்.

ஒயிட்னரை நுகரும்போது நேரடியாக மூளை செல்களைத் தாக்குவதால் மூளை செயலிழக்க ஆரம்பிக்கும். மூச்சுத் திணறல், நுரையீரல் அழற்சி, தண்டுவடம் மற்றும் நரம்பு மண்டலங்கள் பாதிப்பு, உறுப்புகள் செயலிழப்பு, ஞாபகமின்மை, பேச்சுத் திணறல் என இதன் பாதிப்புகள் எண்ணிலடங்கா. அளவுக்கதிகமாக பயன்படுத்தும் போது உயிருக்கே உலை வைத்துவிடும் அபாயமும் உண்டு.

உடல் ரீதியான பாதிப்புகள் மட்டுமின்றி மன ரீதியாகவும் இதன் பாதிப்பு அதிகம். மனக் கவலைகளை ஆற்றும் மருந்தாக நினைத்து இதைப் பயன்படுத்துபவர்கள் உண்மையில் வெந்த புண்ணில் வேல்... இல்லை ஆசிட் ஊற்றிக் கொள்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

இவ்வளவு மோசமான காரியத்தைத்தான் பேருந்தில் எனக்கருகில் இருந்த அந்த மாணவன் திரை மறைவின்றி செய்து கொண்டிருந்தான். இப்போது நானும் என் பங்கிற்கு ஒயிட்னர் பயன்படுத்துவதன் அபாயத்தை அவனுக்கு பக்குவமாக எடுத்துச் சொன்னேன். அவனும் தலையாட்டினான். ஆனாலும் அது 'தெளிந்த' தலையாட்டலாக எனக்குப்படவில்லை.

"மனசு சரியில்லாமத்தாண்ணே இப்படி செய்யுதேன். கொஞ்ச நாள் கழிச்சி விட்ருவேன்"
என்ற அவன் வாக்குறுதியில் எந்த உத்தரவாதமும் இல்லை.

எந்தக் கவலையும் இல்லாத வாழ்வின் வசந்த காலமாக சொல்லப்படும் பள்ளிப் பருவத்திலேயே மனசு சரியில்லாமல் போவதும் அதற்கு மருந்தாக ஒயிட்னரை நாடுவதுமாக இருந்தால் வாழ்வில் இன்னும் எத்தனையோ விஷயங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறதே? அதற்கெல்லாம் இவன் எதை நாடுவான்? என்று நினைத்துப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது.

அண்மைக் காலமாக மாணவர்களிடையே அதிகரித்து வரும் குற்றங்களுக்கு இது போன்ற போதைப் பழக்கங்களும் முக்கிய காரணமாக இருக்கலாம். இந்த தீமைகளைக் களைவதில் ஆசிரியர்களை விட பெற்றோர்களுக்கு பெரும் பங்கு இருப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

பல்லாயிரக் கணக்கில் செலவழித்து ஆடம்பரமான பள்ளியில் சேர்ப்பதும் தேவைக்கு மிஞ்சிய பாக்கட் மணி கொடுப்பதும் வீட்டில் லேப்டாப் சகிதம் தனி அறை ஒதுக்குவதும் செய்து விட்டால் பெற்ற கடன் தீர்ந்தது என்றில்லாமல் பிள்ளைகளின் ஒழுக்கத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

முக்கியமாக பிள்ளைகளிடம் மனம்விட்டுப் பேசுவதற்கும் அவர்களின் சுகதுக்கங்களைப் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பளிக்க வேண்டியதும் அவசியம். தங்கள் மனதில் இருக்கும் சுமைகளை வேறு யாவரையும் விட பெற்றோரிடத்தில் சொன்னால் போதும் நிச்சயம் ஆறுதலும் தீர்வும் கிடைக்கும் என்ற ஆழமான நம்பிக்கை பிள்ளைகளுக்கு வர வேண்டும். அத்தகைய அழகிய பந்தத்தை பெற்றோர் ஏற்படுத்திவிட்டால் பிள்ளைகள் வேறு எதற்கும் அடிமைப்பட வாய்ப்பில்லை.

ரொட்டிக்கடை ஸ்டாப் வந்தது. நான் இறங்கிக் கொண்டேன். கீழேயிருந்து அந்த மாணவனை மீண்டும் ஒருமுறைப் பார்த்தேன். தொடர்ந்து அவன் சுவாசத்தில் போதையேற்றிக் கொண்டிருந்தான். அவன் நேர்வழி பெற இறைவனை வேண்டிக் கொண்டு என் வழியில் நடையைக் கட்டினேன். நம்மால் வேறு என்ன செய்ய முடியும்?

ஒயிட்னர் போதை தொடர்பான மேலும் செய்திகளுக்கு பின்வரும் சுட்டிகளை அழுத்துங்கள்.ஒயிட்னர்
போதையால் ரோட்டில் மயங்கிக் கிடந்த
பள்ளி மாணவன்

ஒயிட்னர்
போதைக்கு சாப்ட்வேர் என்ஜினியர்
பலி

எச்சரிக்கை
ரிப்போர்ட் - ஒயிட்னர் போதை

Thursday, March 1, 2012

பேஸ்புக் மீட்டுக் கொடுத்த பழைய நண்பன்!

நூறு கோடிப் பயனர்களை நோக்கிய அதிவேகப் பயணத்தில் சென்று கொண்டிருக்கும் பேஸ்புக்கில் அப்படி என்னதான் இருக்கிறது?
பலரும் பயன்படுத்தும் தேடுதளமான கூகுளையெல்லாம் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் முத்திரை பதிக்கக் காரணம் என்ன?
இன்னும் எதுவரை பேஸ்புக் சாதிக்கும்?
இந்தக கேள்விளுக்கான பதில்களைப் பார்ப்பதற்கு முன் என் அனுபவம் ஒன்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.

சில மாதங்களுக்கு முன் எனது ஐடிஐ கால நினைவுகளைத் தோண்டியெடுத்து தொடர்பு அறுந்து போன பழைய நண்பர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு எங்கே இருக்கின்றீர்கள் நண்பர்களே என்ற தலைப்பில் பதிவிட்டுருந்தேன்.

அதில் ஒரு நண்பன் சுந்தரராஜன். அண்மையில் பேஸ்புக்கில் என்னைக் கண்டுபிடித்து நட்பு கோரிய போது என்னால் நம்பவே முடியவில்லை. கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் எங்கள் நட்பு துளிர் விட்டதில் துள்ளிக் குதித்தது மனது. சுந்தரராஜனுக்கும் எனக்குமான நட்பு மிக நெருக்கமாக இல்லாத சாதாரண நட்பாக இருந்தாலும் அவன் செய்த சிறு உதவி என் வாழ்க்கையின் பெரும் திருப்புமுனைக்கு வித்திட்டதென்றால் அது மிகையாகாது. அது என்னவென்று பார்ப்பதற்கு முன் அவனைப் பற்றிய சிறுகுறிப்பு வரைந்து விடுகிறேன்.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவிக்குப் பக்கத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பட்டங்காடு என்ற கிராமம்தான் நண்பனின் சொந்த ஊர். அதனால் அவனை பட்டங்காடு என்ற பட்டப்பெயரிலேயே செல்லமாக அழைப்போம். பனை மற்றும் பனை சார்ந்த தொழில்தான் அவன் குடும்பத் தொழில். நெல்லைப் பேட்டை ஐடிஐயில் இயந்திரப் பணியாளர் (Machinist) பிரிவில் நாங்கள் ஒன்றாகப் படித்தோம். தினமும் ஐடிஐக்கு ரயில் பயணமாக வந்து சேர்வான்.

கள்ளமில்லாத கிராமத்துப் பேச்சு, குழந்தைத் தனமான முகம், கலகலப்பான சிரிப்பு, சுறுசுறுப்பு இவைதான் சுந்தரராஜனை மற்ற நண்பர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் அடையாளங்கள். அவன் கிராமத்துப் பேச்சின் இசைநயத்திற்காகவே அடிக்கடி அவனை பேசச்சொல்லி ரசிப்போம். அப்போ நீங்கல்லாம் என்ன சிட்டியா? என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. நெல்லைத் தமிழின் ஓசை நயத்தில் பல உட்பிரிவுகள் உண்டு.

இது மட்டுமல்லாமல் நண்பனுக்கு பொறுமையும் கடின உழைப்பும் தியாக மனப்பான்மையும் அதிகமுண்டு. எந்தளவுக்கென்றால் பக்கம் பக்கமாக எழுத வேண்டிய தியரி, நுணுக்கமாக வரைய வேண்டிய வரைபடங்கள், நீண்ட நேரம் நின்று இயந்திரத்தை இயக்குதல் இவை போன்ற பொறுமையை சோதிக்கும் காரியங்களை சில பொறுமையற்ற நண்பர்கள் இவனிடத்தில் ஒப்படைத்து விடுவார்கள். இவனும் சளைக்காமல் அவற்றையெல்லாம் செய்து கொடுப்பான்.

இவ்வாறு அன்று நண்பர்களுக்காக சேவகம் செய்தவன், இன்று நாட்டு மக்கள் அனைவருக்காகவும் சேவகம் செய்து கொண்டிருக்கிறான். ஆம் நண்பன் சுந்தரராஜன் இப்போது இராணுவத்தில் பணி புரிந்து கொண்டிருக்கிறான்.

நண்பன் சுந்தரராஜன்

பனி மழை பொழியும் காஷ்மீரில் பனி மலைகளுக்கிடையே துப்பாக்கியோடு எல்லை காக்கும் படை வீரனாகப் பார்க்கும் போது அவனை நண்பனாகக் கொண்டதற்காக பெருமையாக இருக்கிறது. ஆனாலும் அவன் பகிர்ந்து கொண்ட இன்னொரு விஷயம் எனக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியது. அது என்ன? அதற்கு முன்னால் அவன் செய்த சிறு உதவி என் வாழ்வில் திருப்புமுனையானது என்று சொன்னேனல்லவா அந்த பிளாஷ்பேக்கை பார்த்து விடலாம்.

அது 1999ஆம் வருடம். ஐடிஐ வாழ்விலிருந்து விடைபெற இன்னும் சில மாதங்களே இருந்தது. நான் உள்ளூர் என்பதால் மதிய சாப்பாட்டிற்கு வீட்டுக்கு சென்று வருவேன். அன்றும் அப்படித்தான் சாப்பிட்டு விட்டு சாவகாசமாக சைக்கிளில் வந்து ஐடிஐயில் பரந்து விரிந்து கிடக்கும் அரச மரத்தடியில் சைக்கிளை நிறுத்தினேன். வழக்கமாக மதியத்திற்கு பிறகு பிராக்டிகல் என்பதால் பணிமனைக்குள் நுழைந்தேன். அங்கே நண்பர்கள் யாரையும் காணவில்லை. எங்கே போயிருப்பார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது எங்கள் பயிற்சி ஆசிரியர் செல்லக்கனி

"ஏல இங்க என்ன செஞ்சிட்டு இருக்க நீ? அங்க எதோ கார் கம்பனிலருந்து வேலைக்கு ஆள் எடுக்க வந்திருக்காங்க நீ போவலியா?" என்றார் வேகமாக

நான் "எனக்குத் தெரியாதே.. எங்க இருக்காங்க சார்?" என்று கேட்க அவர்,

"MRTV பக்கத்துல இருக்க கிளாஸ் ரூம்ல ரிட்டன் டெஸ்ட் நடக்கு. சீக்கிரமா ஓடுல" என்று விரட்டினார்.

ஒரே ஓட்டமாய் ஓடினேன். கிளாஸ் ரூம் வாசல்ல நின்னிட்டுருந்தவர்
"தம்பி 18 வயசு கம்பிளீட் ஆயிருந்தா மட்டும்தான் எழுத முடியும்." என்றார்.

10ம் வகுப்பு சான்றிதழ் படி என் பிறந்தநாள் 5.4.1981 என்பதால் எனக்கு 18 வயது பூர்த்தியாகி இருந்தது. ஆனால் உண்மையில் நான் பிறந்தது 5.6.1982. எட்டாம் வகுப்புக்காக பள்ளி மாறிய போது ஒரு புண்ணியவான் தவறுதலாக மாற்றிப் போட்டு விட்டார். ஆனால் அதற்காக நான் பல நாட்கள் வருத்தப்பட்டதுண்டு. ஆனால் அதுவே என் தலையெழுத்து மாறுவதற்கு காரணமாக அமைந்தது.

சரி விஷயத்துக்கு வருவோம். எழுத்து தேர்வுக்கு வகுப்பறைக்குள் நுழையப் போகும் முன் சட்டைப்பையைத் தடவிப் பார்த்தால் பேனா இல்லை. அப்போதும் சரி இப்போதும் சரி பேனா என்னிடம் நிரந்தரமாகத் தங்கியதே இல்லை. அன்றும் அப்படித்தான் தொலைத்திருந்தேன். படபடப்போடு சுற்றும் முற்றும் பார்த்த போதுதான் நண்பன் சுந்தரராஜ் அங்கே தென்பட்டான். அவன் வயதுக்கு (18) வரவில்லை என்பதால் தேர்வுக்கு அவனை அனுமதிக்கவில்லை. என் தவிப்பைப் பார்த்த அவன் தன் பேனாவைக் கொடுத்து வாழ்த்தி அனுப்பினான்.

அவனிடத்தில் பேனாவை இரவல்
வாங்கி தேர்வு எழுதி தேர்ச்சியும்
பெற்று பிறகு நடந்த நேர்முகத்
தேர்விலும் தேர்வு பெற்றேன். அதன்
பிறகு ஜூலை 31ம்
தேதி நெல்லையிலிருந்து மூட்டை முடிச்சுகளைக்
கட்டிக் கொண்டு தேர்வான சக
நண்பர்களோடு சென்னை வந்து பணியில்
சேர்ந்து பிறகு பணி நிரந்தமாகி சென்னையில்
இடம் வாங்கி, வீடு கட்டி, திருமணம்
முடித்து இரண்டு குழந்தைகளுக்குத்
தகப்பனாகி....
13 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.

பேனா கொடுத்தது என்ன பெரிய
உதவியா என்று நீங்கள் நினைக்கலாம்.
ஆனால் அந்த நேரத்தில்
அது கிடைத்திரா விட்டால்
அல்லது தாமதமாகியிருந்தால் நான்
அந்த தேர்வு எழுதியிருக்க முடியாது.
என் வாழ்க்கைப் பயணம்
மாறியிருந்திருக்கும். ஒரு நல்ல
வாய்ப்பை நழுவ
விட்டு விட்டோமே என்ற பரிதவிப்புடன்
இருந்திருப்பேன்.

காலத்தினாற்
செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது


என்று வள்ளுவர் சொல்வது போல சிறிய
உதவியென்றாலும் என்னைப்
பொருத்தவரை அது பெரிய
உதவியாகி மனதில் மறக்க முடியாத
நினைவாக தங்கி விட்டது. பேஸ்புக்கில்
நண்பனிடம்
இதை சொன்னபோது அப்படியா என
ஆச்சரியப்பட்டு தேங்க்ஸ் டு காட்
என்றான் தன்னடக்கத்தோடு. ஆம்.!
எல்லாப் புகழும் இறைவனுக்கே.
பட்டங்காட்டில் பனையேறிய நண்பன்
பட்டாளத்துக்கு சென்று மலையேறி விட்டதில்
சந்தோஷமாக இருந்தாலும் வருத்தமான
விஷயம் என்னவென்றால் அவன்
திருமணம் பற்றி நான்
கேட்டபோது தனக்கு இன்னும்
திருமணமாகவில்லை என்றும் பல
இடங்களில் பெண் பார்த்தும் தான்
இராணுவத்தில் இருப்பதால்
மறுத்துவிட்டதாகவும் மிக
நெருக்கமான உறவினர் கூட இதில்
விதிவிலக்கல்ல என்றும் தெரிவித்தான்.
அடடா என்ன உலகம் இது. யார்
யாருக்கோ அடிமைச் சேவகம் செய்து,
மனைவி குழந்தைகளையெல்லாம்
பிரிந்திருக்க நேரிடும் என்று தெரிந்தும்
வெளிநாடுகளில்
வேலை செய்வோருக்குத் தயங்காமல்
தங்கள் பெண்ணை மணம் முடித்துக்
கொடுக்கும் பெற்றோர், சொந்த நாட்டில்
கம்பீரமாக நாட்டைக் காக்கும்
பணியிலிருப்பவனுக்கு பெண் தர
மறுப்பது கொடுமையல்லவா?
நிச்சயம் என் நண்பனுக்கு அவன்
மனதைப் புரிந்து கொண்ட மணப்பெண்
கிடைக்கும் என்ற
நம்பிக்கையோடு அவனுடனான நட்புப்
பயணம் தொடர்கிறது பேஸ்புக்
வழியாக.

பேஸ்புக்கின் அபார
வளர்ச்சி பற்றி ஆரம்பத்தில்
சொன்னேனல்லவா? நாடு, மொழி, இனம்
போன்ற எல்லைகளைக் கடந்த
நண்பர்களை உருவாக்கித்
தருவதோடு எங்கோ எப்போதோ முடிந்து போன
பழைய நட்புகளையும் மீட்டுத்
தருவதால்தான் பேஸ்புக்
இன்று பலருக்கு அன்றாட வாழ்வின்
ஓர் அங்கமாகி விட்டது.
நண்பனை மீட்டுத் தந்த
பேஸ்புக்கிற்கு நன்றி.!

ஊர்
உறவு நட்பு வட்டாரத்தையெல்லாம்
விட்டு காஷ்மீரத்து எல்லையில்
இருக்கும் நண்பனுக்கு இப்போதைய
ஒரே ஆறுதல் பேஸ்புக் நட்புகள்தான்.
நண்பர்களே நீங்களும்
அவனுக்கு ஆறுதல் தர நினைத்தால்...
பேஸ்புக்கில் நண்பன் சுந்தரராஜனின்
முகவரி
http://
facebook.com/profile.php?
id=100003302821002

எனது முகவரி(ஹி..ஹி..)
http://
facebook.com/iammeeran/

Sunday, February 12, 2012

சரியான கோணத்தில் தினமணி தலையங்கம்!

சென்னையில்
மாணவன் ஒருவன் ஆசிரியரைக் குத்திக்
கொன்ற சம்பவம் பற்றி பலவிதமான
கருத்துகள் பரிமாறப்பட்டு வருகின்றது.
இது குறித்து தினமணியின் வெளியான
தலையங்கம், பிரச்சனையை சரியான
கோணத்தில்
ஆய்வு செய்து எழுதியிருப்பதாக
எனக்குப் படுகிறது. அதை உங்களுடன்
இங்கே பகிர்ந்து கொள்கிறேன்
.

வியாழக்கிழமை தொலைக்காட்சிச்
செய்திகளைப் பார்த்துக்
கொண்டிருந்தவர்கள் அனைவரையும்
அதிர்ச்சியில் உறைய வைத்தது,
சென்னையில் 9-ம் வகுப்பு மாணவன்
ஒருவன் வகுப்பு அறையில்
ஆசிரியையை வெறித்தனமாகக் குத்திக்
கொலை செய்த சம்பவம். 39 வயதான
உமா மகேஸ்வரி, ஆசிரியர்
பணியை மக்கள் சேவையாகக் கருதி,
தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்
என்பதை அறியும்போது,
கொலையுண்டிருப்பது ஓர்
ஆசிரியையா அல்லது தமிழகத்தின்
வருங்காலமா என்று நெஞ்சம்
துணுக்குறுகிறது.

அதே சென்னையில்
இன்னொரு சம்பவம். அனகாபுத்தூரில்
எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த 19
வயது இளம் பெண்ணை, அவரிடம்
நண்பர்களாகப் பழகிய
நான்கு இளைஞர்கள் வஞ்சகமாக
அழைத்துச் சென்று, அவருக்குக்
குளிர்பானத்தில் மதுவைக்
கலந்து கொடுத்து வெறித்தனமாகக்
கற்பழித்திருக்கிறார்கள். அந்த
நான்கு பேரும் மாணவர்கள். அதிலும்
பொறியியல் படிக்கும் மாணவர்கள்.

இளம் தலைமுறையினர் மத்தியில்
காணப்படும் பொறுமையின்மைக்கும்,
வெறித்தனமான பிடிவாதங்களுக்கும்,
கட்டுப்பாடில்லாத ஒழுக்கக்
கேடுகளுக்கும் அடிப்படைக்
காரணங்கள்
இறையுணர்வு இல்லாமையும்,
நுகர்வுக் கலாசாரத்தின்
தாக்கமும்தான் என்பது நமது தேர்ந்த
கருத்து. அதிலும் குறிப்பாக, நுகர்வுக்
கலாசாரம் கட்டவிழ்த்து விட்டிருக்கும்
ஒழுக்கக் கேடுகளில் முக்கியப்
பங்கு வகிப்பது வக்கிரத்தனங்களின்
ஊற்றுக்கண்ணாக விளங்கும்
காட்சி ஊடகங்களும்,
வெறித்தனத்துக்கு வழிகோலும் மதுப்
பழக்கமும்தான் இந்தப் போக்குக்குக்
காரணங்கள்.


இறையுணர்வாளர்கள்
தவறிழைக்கவில்லையா? இறைவனின்
பெயரால் இழைக்கப்பட்ட கொடுமைகள்
கொஞ்சமா நஞ்சமா?
ஆஷாடபூதிகளாகவும், ருத்திராட்சப்
பூனைகளாகவும், கபட வேட
தாரிகளாகவும் எத்தனையோ பேர்
காவி உடை தரித்த,
வெள்ளை அங்கியை அணிந்த
காமுகர்களாக உலவினார்கள்
தெரியுமா? என்றெல்லாம்
இறை மறுப்பாளர்கள்
எதிர்க்கேள்வி எழுப்பக்கூடும். அவர்கள்
கூறுவது எல்லாம் பொய் என்று நாம்
மறுக்கவோ, ஒதுக்கித் தள்ளவோ தயாராக
இல்லை.

அதேசமயம்,
இறையுணர்வு என்பது பரவலாக,
சமுதாயத்தில் ஒழுக்கத்தையும்
நேர்மையையும் தவறு செய்தால்
இறைவன் தண்டிப்பார் என்கிற தார்மிக
பய உணர்வையும்
ஏற்படுத்தி வந்திருக்கிறது. கபடவேட
தாரிகள் சாமியார்களாகவும்,
பாதிரியார்களாகவும்,
மௌலவிகளாகவும் உலவி இருக்கலாம்.
ஆனால், அப்படி நடந்துகொண்ட
ஒரு சிலரைக் காரணம்
காட்டி சமுதாயத்தில் ஒழுக்கத்தைப்
போதித்த தெய்வத் தொண்டர்கள்
அனைவரையும் நாம்
இழிவு செய்துவிட முடியாது.
கூடாது!

இளைஞர்களுக்கு ஆன்மிக
போதனை நடத்தி வந்த காலகட்டத்தில்,
பேராசைக்கு இடம் கொடுக்காதே,
ஒழுக்கம்தான் உயர்வு தரும்,
இறை நம்பிக்கை உன்னைக்
காப்பாற்றும்
என்று பிஞ்சு உள்ளங்களில் நல்ல
போதனைகளைப் பள்ளிகளிலும்
வீட்டிலும் ஊட்டி வளர்த்துவந்த
காலங்களில்
எங்கோ ஒன்றிரண்டு சம்பவங்கள்
நடந்ததுபோக, இப்போது இளைஞர்கள்
பாதை தவறி நடப்பது என்பதே ஒரு நெறியாக
மாறி விட்டிருக்கிறது என்பதுதான்
உண்மை.

கடவுள் என்று ஒருவர்
இல்லையென்றால்,
அப்படி ஒருவரை நாம்
கண்டுபிடித்து நிலைநிறுத்தியாக
வேண்டும் என்பார் பிரெஞ்சுப்
புரட்சிக்கு வித்திட்ட சிந்தனையாளர்
வால்டேர். பள்ளிகளில்
இறையுணர்வு போதிக்கப்பட்டது.
ஆத்திச்சூடியும், கொன்றை வேந்தனும்,
உலக நீதியும், மூதுரையும்
பிஞ்சு உள்ளங்களை நெறிப்படுத்த
சொல்லிக் கொடுக்கப்பட்டன. இப்போதைய
நர்சரி ரைம்ஸ் கல்வி முறை,
பணத்தைத் தேடுவதும்
வாழ்க்கை வசதிகளைத் தேடுவதும்,
சிற்றின்ப
சந்தோஷங்களுக்கு வழிகோலுவதும்
மட்டுமே தனது குறிக்கோள்
என்று மாறிவிட்டிருப்பதன்
வெளிப்பாடுதான் சென்னையில்
நடந்தேறியிருக்கும் அந்த
இருவேறு சம்பவங்கள்.

கற்பழிக்கப்பட்ட பெண்,
தனது நண்பர்கள் என்று அந்த
நான்கு மாணவர்களையும்
வீட்டுக்கு அழைத்துக்
கொண்டு வந்து தாய்க்கு அறிமுகப்படுத்தியபோது,
சகோதரிபோலத் தனது மகளுடன்
பழகுகிறார்கள் என்று அந்தத் தாய்
கருதி அதை அங்கீகரித்ததன்
விளைவுதான் இன்று கற்பழிப்பில்
முடிந்திருக்கிறது என்று நாம்
சொன்னால் நம்மைப் பழமைவாதிகள்
என்று ஒதுக்கக்கூடும். ஆனால்,
அதுதானே நிஜம்?

ஆணும் பெண்ணும் நண்பர்களாக
இருப்பதுபோலத் திரைப்படங்களும்,
தொலைக்காட்சித் தொடர்களும்,
கதைகளும் பரவலாக
வெளிவருகின்றன.
அவை நடைமுறையில்
சாத்தியம்தானா என்பதை நினைத்துப்
பார்க்கக்கூட திராணியற்றவர்களாக
நாம் மாறிவிட்டிருக்கிறோம். காரணம்
இதைத் தவிர்க்க முடியாது என்கிற
சூழ்நிலையை இன்றைய நுகர்வுக்
கலாசாரச் சூழல்
உருவாக்கி விட்டிருக்கிறது.

திரைப்படங்கள் சமுதாய
சீர்திருத்தங்களுக்கு வித்திட்டதுபோய்
சமுதாயச் சீரழிவுக்கு வழிகோலிக்
கொண்டிருக்கின்றன. வாழ்க்கையில்
காதலைத் தவிர,
வேறு உணர்வுகளே இல்லை என்பதுபோன்ற
பிரமையை ஏற்படுத்தாத
திரைப்படங்கள்
ஒன்றிரண்டு மட்டுமே என்றாகிவிட்டது.

பள்ளி மாணவர்கள் தொடங்கி பிறந்த
நாளானாலும், தேர்வில்
வெற்றி பெற்றாலும், மகிழ்ச்சியான
தருணம் என்றாலும் மது அருந்திக்
கொண்டாடுவது என்பது கலாசாரமாகிவிட்டிருக்கிறது.
போதாக்குறைக்கு, நமது அரசும்
ஊருக்கு ஒன்றிரண்டு என்பதுபோய்
தெருவுக்குத் தெரு மதுபான
விற்பனைக் கடைகளைத்
திறந்து வைத்து இளைஞர்களைத்
தவறான வழிக்குத் திசைதிருப்புவதில்
முனைப்பாக இருக்கிறது.

பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள்
பணம்
சம்பாதிப்பதை மட்டுமே லட்சியமாகக்
கருதுகிறார்களே தவிர, குறைந்த
வருமானமானாலும் ஒழுக்கமான
நிறைந்த வாழ்வுக்கு அவர்களைப்
பழக்கத் தயாராக இல்லை.
ஆசிரியையை வெறித்தனமாகக் குத்திக்
கொலைசெய்த அந்தப் பள்ளிச்
சிறுவனுக்கு தினமும்
கைச்செலவுக்கு நூறு ரூபாய்
தருவார்களாம் பெற்றோர்.
திரைப்படம் பார்த்துதான்
தனது பழிவாங்கும் குணம்
அதிகரித்ததாகக் கூறுகிறான் அந்தப்
பள்ளி மாணவன்.

சகோதரியாகப் பழகிய
பெண்ணை போதையில்
கற்பழிக்கிறார்கள் நான்கு பொறியியல்
கல்லூரி மாணவர்கள். இறைவா,
நாங்கள் எங்கே போகிறோம்?

Saturday, February 11, 2012

பழைய சென்னை -அபூர்வ படங்கள்

பழைய நினைவுகளை அகழ்வாய்வு செய்து மீட்டெடுப்பதில் அலாதி பிரியம் நமக்கு. அதிலும் மக்கள்,வாகன மற்றும் கட்டிட நெரிசலில் சிக்கித் தவிக்கும் சென்னை, அந்த காலத்தில் எப்படி இருந்தது என்பதை பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமானது. இணையத்தில் கிடைத்த பழைய சென்னையை தூசு தட்டி உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். வாங்க பார்த்து ரசிக்கலாம்.

சைக்கிளில் ஹாயாக செல்ல முடிந்த மவுன்ட் ரோடு

கூளமில்லா கூவம்

அழகிய மயிலாப்பூர் 1906

பரபரப்பில்லாத பாரிமுனை

அமைதியான மெரினா கடற்கரை

இடுப்பு வரை நீர் தேங்காத மழைக்காலம்

எழில்மிகு எழும்பூர் இரயில் நிலையம்

நெரிசலற்ற சென்ட்ரல்

மூச்சுமுட்டாத கடைவீதி 1895

id=

காத்திருக்கும்
அவசர ஊர்திகள்(Ambulance) 1940

id=

ஈ ஓட்டுப்படும் கார் ஷோரூம் 1913

id=

கூச்சலில்லாத
கொத்தவால்சாவடி காய்கறிக் கூடம்

id=

வாகனங்கள்
வரிசைகட்டி நிற்கப்படாமல் கட்டப்படும்
அண்ணா மேம்பாலம் 1972