Friday, May 21, 2010

லைலா புயலும் பாகிஸ்தானும்.!

வங்கக் கடல் பகுதியை ஆட்டுவித்து அடங்கியிருக்கும் லைலா புயலுக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்று கேட்கிறீர்களா? இருக்கிறதே.. இப்புயலுக்கு லைலா என்ற பெயர் பாகிஸ்தான் வைத்ததாகும் என்பதுதான் அது. வேறு எந்த தொடர்பும் இல்லை! இந்தியாவைத் தாக்கிய புயலுக்கு பாகிஸ்தான் ஏன் பெயர் வைக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள முதலில் புயலுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை எப்படி வந்தது என்பதைத் தெரிந்து கொள்வோம்.
உலகில் 1970க்கு முன்பு வரை புயலுக்கு பெயர் வைக்கும் வழக்கம் இல்லை. வானிலை ஆய்வு மையங்கள் 1A, 1B என ஆங்கில எழுத்துக்களின் வரிசைப்படி புயலுக்குப் பெயர் வைத்து வந்தன. 1970ல் ஜெனிவாவில் நடைபெற்ற மாநாட்டின் போது, பசிபிக் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும்படி அந்த பகுதியைச் சேர்ந்த நாடுகளை உலக வானிலை அமைப்பு முதன்முறையாகக் கேட்டுக் கொண்டது. அதே போல், வடக்கு இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும்படி, 2000ல் நடைபெற்ற உலக வானிலை அமைப்பு -ஆசிய, பசிபிக் நாடுகளுக்கான ஐக்கிய சபை பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் மாநாட்டில் இந்தப் பகுதியில் அமைந்துள்ள நாடுகளைக் கேட்டுக்கொண்டது.
அதன்படி, வடக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள இந்தியா, வங்க தேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய 8 நாடுகளும் சேர்ந்து 64 பெயர்கள் கொண்ட பட்டியலைத் தயாரித்தன. வடக்கு இந்திய பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு இந்த பட்டியலிலிருந்து ஒவ்வொரு பெயராக வைக்கப்ட்டு வருகின்றன. ஒருமுறை ஒரு நாடு தேர்வு செய்த பெயர் வைக்கப்பட்டால், அடுத்த முறை வேறு நாடு தேர்வு செய்த பெயரில் புயல் அழைக்கப்டுகிறது. இதுபோல் 8 நாடுகளின் பெயர்களும் சுழற்சி முறையில் வைக்கப்படுகின்றன. அதன்படி தற்போது அடித்து ஓய்ந்திருக்கும் புயலுக்கு பாகிஸ்தானின் 'லைலா' பெயர் வைக்கப்பட்டது. இதற்கு முன் ஓமன் பரிந்துரை செய்த வார்டு என்ற பெயர் வைக்கப்பட்டது.

இதுதாங்க லைலா புயலுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள தொடர்பு.! சரி அது போகட்டும் அடுத்த புயலுக்கு என்ன பெயர்?
அடுத்த புயலுக்கு பெயர் தயாராக இருக்கிறது. இலங்கை தேர்வு செய்த 'பண்டு' என்ற பெயர்தான் அது. பண்டு என்ன செய்யும்? காத்திருப்போம்..

2 comments:

  1. ஆகா அப்படியா ?

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி நண்பர் malgudi அவர்களே.!

    ReplyDelete