Saturday, May 8, 2010

சடங்கு.!

எவரேனும் ஒருவர்
தோள் கொடுத்திருந்தால் போதும்..
அவர்
சாய்ந்திருக்க மாட்டார்
இதோ
இப்பொழுது நான்கு தோள்கள்
அவரைச் சுமக்கின்றன.!

ஏதேனும் ஒரு விழி
இரக்கப் பார்வை
வீசியிருந்தால் கூடப்போதும்
அவர்
வாழ்ந்திருக்கக் கூடும்
இதோ
இப்பொழுது எத்தனையோ விழிகள்
கண்ணீர் வடிக்கின்றன!

யாரேனும் ஒருவர்
வழி காட்டியிருந்தால்
அவர் பயணம்
முடிந்து போயிருக்காது
இதோ
இப்பொழுது எத்தனையோ பேர்
வழியனுப்ப வந்திருக்கிறார்கள்!

வயிற்றுக்கு கஞ்சி கிடைக்காதவர்
வாய்க்கு மட்டும்
இன்று அரியும் பாலும்!

வறுமையில் வாடி
உதிர்ந்தவர்
இதோ இங்கே
பூத்துக் கிடக்கிறார்
மாலைகளால்!

நடந்த காலங்களில்
அவருக்கு
வழி தராதவர்கள்
இதோ
இப்பொழுது வீதியெங்கும்
மலர் தூவுகிறார்கள்..
பாவம் அவர் பாதங்களோ
பாடையில்..!

2 comments:

  1. கவிதையைக் காட்டிலும் கவிதையின் தலைப்பு அதிகம் பேசுகிறது, கவிதை கொண்ட பொருள் குறித்து. எல்லோரும் யோசிக்கவேண்டிய நல்ல சிந்தனை. வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
  2. நட்பு மறவாமல் வருகை புரிந்த நண்பர் கிரி அவர்களுக்கு நன்றி

    ReplyDelete