Wednesday, June 8, 2011

கோளுரை

மதியை மதித்தவன்
வானத்தில் ஏறி
மதியை மிதித்து வந்தான் - தலை
விதியை நம்பி
விழுந்தவனே! நீ
விழுந்தே கிடக்கின்றாய்

வெற்றி எழுத்தாய்
வியர்வையைக் கொண்டவன்
விதியை எழுதுகிறான் - பொய்
நெற்றி எழுத்தை
நம்பியவன் நீ
நீரில் எழுத்தானாய்

கைகளில்தான் உன்
வருங்காலம் அது
கைகளின் சக்தியிலே - வெறும்
பொய்களின் வழியில்
போனவனே! அதை
ரேகையில் தேடுகிறாய்

கோளும் நாளும்
குறித்தது ராமன்
கொற்றவன் ஆவதற்கு - அந்த
நாளில் என்ன
நடந்தது? பாவம்
நடந்தான் காட்டுக்கு

காலம் பார்த்து
நடந்ததுதானே
கண்ணகி கல்யாணம் - அவள்
கோலம் இழந்து
கொண்டதுவோ மலர்க்
குங்கும அலங்கோலம்

சாதகம் பார்த்தாய்
சகுனம் பார்த்தாய்
சகலமும் பார்த்தாயே - ஒரு
பாதகம் இன்றி
வாழ்ந்தாயா? வெறும்
பயத்தால் சாகின்றாய்

அழுவது சில நாள்
சிரிப்பது சில நாள்
அனைவர்க்கும் உள்ளதுதான் - கதை
முழுவதும் உனக்கு
முன்னால் தெரிந்தால்
மூச்சில் சுவை ஏது?

-கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிய "சுட்டுவிரல்" எனும் நூலிருந்து.

No comments:

Post a Comment