Tuesday, March 20, 2012

நூதன போதையின் பிடியில் மாணவ சமுதாயம்!

மாலை நேர திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் பரபரப்போடு இயங்கிக் கொண்டிருந்தது. பேட்டை செல்வதற்கான பேருந்தை எதிர்பார்த்தபடி நின்றுருந்தேன். கொஞ்ச நேரத்தில் சுத்தமல்லி பஸ் ஆடி அசைந்து உள்ளே நுழைந்தது. நிற்பதற்கு முன்னாலேயே மக்கள் கூட்டம் மொய்க்க ஆரம்பித்து விட்டது.

"மொதல்ல எறங்குதவுங்களுக்கு வழிய விடுங்கப்பா.." உள்ளிருந்து வந்த குரலையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் முண்டியடித்து நுழைந்தார்கள் சிலர். இன்னொரு பக்கம் ஜன்னல் வழியாக இருக்கைக்கு முன்பதிவு செய்வதில் மும்மரமாயிருந்தனர் சிலர். மாலை நேரமென்பதால் மாணவர்கள் கூட்டம் அதிகமாயிருந்தது.

ஒருவழியாக மல்லுக்கட்டி ஏறியதில் கடைசி இருக்கையில் இடம் கிடைத்தது எனக்கு.

"எத்துன பஸ்ஸு வுட்டாலும் காண மாட்டுக்கு.. இந்த பேட்டை ஊருக்கு மட்டும் எங்க கெடந்துதான் வருமோ இவ்வளவு கூட்டம்"
பெருமூச்சு விட்டபடி புலம்பினார் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெரியவர்.

"அண்ணே.. இந்த பேக்க கொஞ்ச நேரம் வச்சிருங்கண்ணே"
நின்று கொண்டிருந்த ஒரு மாணவன் தன் புத்தகச் சுமையை என் மடியில் இறக்கி வைத்துவிட்டு தன் சகாக்களோடு அரட்டையைத் தொடர்ந்தான்.

ஹாரன் சத்தங்கள் அலர பேருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஊர்ந்து பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்தது. கண்டக்டரிடம் பேட்டை ரொட்டிக்கடை ஸ்டாப்பிற்கான பயணச்சீட்டு வாங்கி பையில் திணித்துக் கொண்டேன். இடது பக்கமிருந்த ஒரு மாணவன், ஏறக்குறைய 14 அல்லது 15 வயது இருக்கலாம் ஏதோ வித்தியாசமாக செய்துகொண்டிருந்தான். அவன் கையில் இருந்த கைக்குட்டையை சுருட்டு போல உருட்டியிருந்தான். நுனிப்பகுதியில் ஏதோ ஈரமாகத் தெரிந்தது. அவ்வப்போது அதை மூக்கிலும் வாய்க்குள்ளும் வைத்து உறிஞ்சிக் கொண்டிருந்தான். எனக்கு சந்தேகமாக இருந்தது.

ஏழெட்டு உறிஞ்சுகளுக்குப் பிறகு பேன்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு சிறிய பாட்டிலை எடுத்து திறந்து அதிலிருந்த அந்த திரவத்தை கைக்குட்டையின் நுனிப் பகுதியில் ஊற்றினான். பிறகு மீண்டும் உறிஞ்சுதலைத் தொடர்ந்தான். நான் சந்தேகித்தது சரியாக இருந்தது. இது தொடர்பாக செய்திகளில் பத்திரிக்கைகளில் ஏற்கனவே பார்த்திருந்ததால் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் இது மிக மோசமான விஷயமாயிற்றே? இதை எப்படி இவன் பொது இடத்தில் ஒளிவுமறைவில்லாமால் சர்வ சாதாரணமாக செய்து கொண்டிருக்கிறான் என்று எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

பக்கத்தில் நின்று கொண்டிருந்த நடுத்தர வயதுடைய அந்த மனிதருக்கும் புரிந்திருக்கும் போல.
அவர் அவனைப் பார்த்து,

"ஏம்ல படிக்குத வயசுல இப்புடி கெட்டு கீவழியாப் போறீங்க? இதுக்கா ஒங்க வீட்ல அப்பா அம்மா பள்ளிக்கூடத்துக்கு அனுப்புதாங்க"
என்று கொஞ்சம் வேகமாகக் கேட்டார்.

"அது ஒண்ணுமில்லண்ணே சும்மாதான்..."
செயற்கையாக புன்னகைத்துக் கொண்டே சொன்னான்.

"நீ என்ன செய்தன்னு எனக்கு நல்லாத் தெரியும். இப்பமே இப்புடி இருந்தா நீங்கள்ளாம் பின்னாடி வாழ்க்கயில எப்புடில முன்னேறுவிய"
அவர் ஆதங்கத்தோடு சொன்னார்.

"இல்லண்ணே மனசு கஷ்டமா இருக்குண்ணே அதான்..." என்றான்

"இந்த வயசுல ஒங்களுக்கெல்லாம் அப்புடி என்னதான் கஷ்டமோ.. எப்படியோ நாசமாப் போங்க"
என்றார் வெறுப்போடு.

அந்த மாணவன் செய்து கொண்டிருந்தது பற்றி அநேகமாக உங்களுக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். தெரியாதவர்களுக்கு சொல்லி விடுகிறேன்.

பேப்பரில் தவறாக எழுதியதையோ பிரிண்ட் செய்யப்பட்டதையோ அழிப்பதற்கு பயன்படுத்தும் பொருள் ஒயிட்னர் எனப்படும். இதை வைத்துதான் மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை அழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் இதுதான் உண்மை. ஒயிட்னரை கர்ச்சீப்பில் ஊற்றி நுகரும் போது அதன் நெடியில் ஒருவித போதை மயக்கம் ஏற்படுகிறதாம். அண்மைக் காலமாக தமிழக இளைஞர்கள் குறிப்பாக பள்ளி மாணவர்கள் இப்பழக்கத்திற்கு அடிமையாவது அதிகரித்து வருகிறதாம்.

இதுமட்டுமின்றி பெட்ரோல், பஞ்சர் ஒட்டும் பேஸ்ட், நக பாலிஷ், பெயிண்ட்.... என மாணவர்களின் சுவாச போதை வஸ்துகளின் கண்டுபிடிப்புப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இவற்றில், மலிவாகக் கிடைப்பதாலும் யாருக்கும் சந்தேகம் ஏற்படுத்தாது என்பதாலும் ஒயிட்னர் முதலிடம் வகிக்கிறது. அதேபோல் உடல் மன ரீதியாக பாதிப்பு ஏற்படுத்துவதிலும் இந்த ஒயிட்னருக்குத்தான் முதலிடம்.

ஒயிட்னரை நுகரும்போது நேரடியாக மூளை செல்களைத் தாக்குவதால் மூளை செயலிழக்க ஆரம்பிக்கும். மூச்சுத் திணறல், நுரையீரல் அழற்சி, தண்டுவடம் மற்றும் நரம்பு மண்டலங்கள் பாதிப்பு, உறுப்புகள் செயலிழப்பு, ஞாபகமின்மை, பேச்சுத் திணறல் என இதன் பாதிப்புகள் எண்ணிலடங்கா. அளவுக்கதிகமாக பயன்படுத்தும் போது உயிருக்கே உலை வைத்துவிடும் அபாயமும் உண்டு.

உடல் ரீதியான பாதிப்புகள் மட்டுமின்றி மன ரீதியாகவும் இதன் பாதிப்பு அதிகம். மனக் கவலைகளை ஆற்றும் மருந்தாக நினைத்து இதைப் பயன்படுத்துபவர்கள் உண்மையில் வெந்த புண்ணில் வேல்... இல்லை ஆசிட் ஊற்றிக் கொள்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

இவ்வளவு மோசமான காரியத்தைத்தான் பேருந்தில் எனக்கருகில் இருந்த அந்த மாணவன் திரை மறைவின்றி செய்து கொண்டிருந்தான். இப்போது நானும் என் பங்கிற்கு ஒயிட்னர் பயன்படுத்துவதன் அபாயத்தை அவனுக்கு பக்குவமாக எடுத்துச் சொன்னேன். அவனும் தலையாட்டினான். ஆனாலும் அது 'தெளிந்த' தலையாட்டலாக எனக்குப்படவில்லை.

"மனசு சரியில்லாமத்தாண்ணே இப்படி செய்யுதேன். கொஞ்ச நாள் கழிச்சி விட்ருவேன்"
என்ற அவன் வாக்குறுதியில் எந்த உத்தரவாதமும் இல்லை.

எந்தக் கவலையும் இல்லாத வாழ்வின் வசந்த காலமாக சொல்லப்படும் பள்ளிப் பருவத்திலேயே மனசு சரியில்லாமல் போவதும் அதற்கு மருந்தாக ஒயிட்னரை நாடுவதுமாக இருந்தால் வாழ்வில் இன்னும் எத்தனையோ விஷயங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறதே? அதற்கெல்லாம் இவன் எதை நாடுவான்? என்று நினைத்துப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது.

அண்மைக் காலமாக மாணவர்களிடையே அதிகரித்து வரும் குற்றங்களுக்கு இது போன்ற போதைப் பழக்கங்களும் முக்கிய காரணமாக இருக்கலாம். இந்த தீமைகளைக் களைவதில் ஆசிரியர்களை விட பெற்றோர்களுக்கு பெரும் பங்கு இருப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

பல்லாயிரக் கணக்கில் செலவழித்து ஆடம்பரமான பள்ளியில் சேர்ப்பதும் தேவைக்கு மிஞ்சிய பாக்கட் மணி கொடுப்பதும் வீட்டில் லேப்டாப் சகிதம் தனி அறை ஒதுக்குவதும் செய்து விட்டால் பெற்ற கடன் தீர்ந்தது என்றில்லாமல் பிள்ளைகளின் ஒழுக்கத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

முக்கியமாக பிள்ளைகளிடம் மனம்விட்டுப் பேசுவதற்கும் அவர்களின் சுகதுக்கங்களைப் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பளிக்க வேண்டியதும் அவசியம். தங்கள் மனதில் இருக்கும் சுமைகளை வேறு யாவரையும் விட பெற்றோரிடத்தில் சொன்னால் போதும் நிச்சயம் ஆறுதலும் தீர்வும் கிடைக்கும் என்ற ஆழமான நம்பிக்கை பிள்ளைகளுக்கு வர வேண்டும். அத்தகைய அழகிய பந்தத்தை பெற்றோர் ஏற்படுத்திவிட்டால் பிள்ளைகள் வேறு எதற்கும் அடிமைப்பட வாய்ப்பில்லை.

ரொட்டிக்கடை ஸ்டாப் வந்தது. நான் இறங்கிக் கொண்டேன். கீழேயிருந்து அந்த மாணவனை மீண்டும் ஒருமுறைப் பார்த்தேன். தொடர்ந்து அவன் சுவாசத்தில் போதையேற்றிக் கொண்டிருந்தான். அவன் நேர்வழி பெற இறைவனை வேண்டிக் கொண்டு என் வழியில் நடையைக் கட்டினேன். நம்மால் வேறு என்ன செய்ய முடியும்?

ஒயிட்னர் போதை தொடர்பான மேலும் செய்திகளுக்கு பின்வரும் சுட்டிகளை அழுத்துங்கள்.ஒயிட்னர்
போதையால் ரோட்டில் மயங்கிக் கிடந்த
பள்ளி மாணவன்

ஒயிட்னர்
போதைக்கு சாப்ட்வேர் என்ஜினியர்
பலி

எச்சரிக்கை
ரிப்போர்ட் - ஒயிட்னர் போதை

Thursday, March 1, 2012

பேஸ்புக் மீட்டுக் கொடுத்த பழைய நண்பன்!

நூறு கோடிப் பயனர்களை நோக்கிய அதிவேகப் பயணத்தில் சென்று கொண்டிருக்கும் பேஸ்புக்கில் அப்படி என்னதான் இருக்கிறது?
பலரும் பயன்படுத்தும் தேடுதளமான கூகுளையெல்லாம் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் முத்திரை பதிக்கக் காரணம் என்ன?
இன்னும் எதுவரை பேஸ்புக் சாதிக்கும்?
இந்தக கேள்விளுக்கான பதில்களைப் பார்ப்பதற்கு முன் என் அனுபவம் ஒன்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.

சில மாதங்களுக்கு முன் எனது ஐடிஐ கால நினைவுகளைத் தோண்டியெடுத்து தொடர்பு அறுந்து போன பழைய நண்பர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு எங்கே இருக்கின்றீர்கள் நண்பர்களே என்ற தலைப்பில் பதிவிட்டுருந்தேன்.

அதில் ஒரு நண்பன் சுந்தரராஜன். அண்மையில் பேஸ்புக்கில் என்னைக் கண்டுபிடித்து நட்பு கோரிய போது என்னால் நம்பவே முடியவில்லை. கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் எங்கள் நட்பு துளிர் விட்டதில் துள்ளிக் குதித்தது மனது. சுந்தரராஜனுக்கும் எனக்குமான நட்பு மிக நெருக்கமாக இல்லாத சாதாரண நட்பாக இருந்தாலும் அவன் செய்த சிறு உதவி என் வாழ்க்கையின் பெரும் திருப்புமுனைக்கு வித்திட்டதென்றால் அது மிகையாகாது. அது என்னவென்று பார்ப்பதற்கு முன் அவனைப் பற்றிய சிறுகுறிப்பு வரைந்து விடுகிறேன்.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவிக்குப் பக்கத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பட்டங்காடு என்ற கிராமம்தான் நண்பனின் சொந்த ஊர். அதனால் அவனை பட்டங்காடு என்ற பட்டப்பெயரிலேயே செல்லமாக அழைப்போம். பனை மற்றும் பனை சார்ந்த தொழில்தான் அவன் குடும்பத் தொழில். நெல்லைப் பேட்டை ஐடிஐயில் இயந்திரப் பணியாளர் (Machinist) பிரிவில் நாங்கள் ஒன்றாகப் படித்தோம். தினமும் ஐடிஐக்கு ரயில் பயணமாக வந்து சேர்வான்.

கள்ளமில்லாத கிராமத்துப் பேச்சு, குழந்தைத் தனமான முகம், கலகலப்பான சிரிப்பு, சுறுசுறுப்பு இவைதான் சுந்தரராஜனை மற்ற நண்பர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் அடையாளங்கள். அவன் கிராமத்துப் பேச்சின் இசைநயத்திற்காகவே அடிக்கடி அவனை பேசச்சொல்லி ரசிப்போம். அப்போ நீங்கல்லாம் என்ன சிட்டியா? என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. நெல்லைத் தமிழின் ஓசை நயத்தில் பல உட்பிரிவுகள் உண்டு.

இது மட்டுமல்லாமல் நண்பனுக்கு பொறுமையும் கடின உழைப்பும் தியாக மனப்பான்மையும் அதிகமுண்டு. எந்தளவுக்கென்றால் பக்கம் பக்கமாக எழுத வேண்டிய தியரி, நுணுக்கமாக வரைய வேண்டிய வரைபடங்கள், நீண்ட நேரம் நின்று இயந்திரத்தை இயக்குதல் இவை போன்ற பொறுமையை சோதிக்கும் காரியங்களை சில பொறுமையற்ற நண்பர்கள் இவனிடத்தில் ஒப்படைத்து விடுவார்கள். இவனும் சளைக்காமல் அவற்றையெல்லாம் செய்து கொடுப்பான்.

இவ்வாறு அன்று நண்பர்களுக்காக சேவகம் செய்தவன், இன்று நாட்டு மக்கள் அனைவருக்காகவும் சேவகம் செய்து கொண்டிருக்கிறான். ஆம் நண்பன் சுந்தரராஜன் இப்போது இராணுவத்தில் பணி புரிந்து கொண்டிருக்கிறான்.

நண்பன் சுந்தரராஜன்

பனி மழை பொழியும் காஷ்மீரில் பனி மலைகளுக்கிடையே துப்பாக்கியோடு எல்லை காக்கும் படை வீரனாகப் பார்க்கும் போது அவனை நண்பனாகக் கொண்டதற்காக பெருமையாக இருக்கிறது. ஆனாலும் அவன் பகிர்ந்து கொண்ட இன்னொரு விஷயம் எனக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியது. அது என்ன? அதற்கு முன்னால் அவன் செய்த சிறு உதவி என் வாழ்வில் திருப்புமுனையானது என்று சொன்னேனல்லவா அந்த பிளாஷ்பேக்கை பார்த்து விடலாம்.

அது 1999ஆம் வருடம். ஐடிஐ வாழ்விலிருந்து விடைபெற இன்னும் சில மாதங்களே இருந்தது. நான் உள்ளூர் என்பதால் மதிய சாப்பாட்டிற்கு வீட்டுக்கு சென்று வருவேன். அன்றும் அப்படித்தான் சாப்பிட்டு விட்டு சாவகாசமாக சைக்கிளில் வந்து ஐடிஐயில் பரந்து விரிந்து கிடக்கும் அரச மரத்தடியில் சைக்கிளை நிறுத்தினேன். வழக்கமாக மதியத்திற்கு பிறகு பிராக்டிகல் என்பதால் பணிமனைக்குள் நுழைந்தேன். அங்கே நண்பர்கள் யாரையும் காணவில்லை. எங்கே போயிருப்பார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது எங்கள் பயிற்சி ஆசிரியர் செல்லக்கனி

"ஏல இங்க என்ன செஞ்சிட்டு இருக்க நீ? அங்க எதோ கார் கம்பனிலருந்து வேலைக்கு ஆள் எடுக்க வந்திருக்காங்க நீ போவலியா?" என்றார் வேகமாக

நான் "எனக்குத் தெரியாதே.. எங்க இருக்காங்க சார்?" என்று கேட்க அவர்,

"MRTV பக்கத்துல இருக்க கிளாஸ் ரூம்ல ரிட்டன் டெஸ்ட் நடக்கு. சீக்கிரமா ஓடுல" என்று விரட்டினார்.

ஒரே ஓட்டமாய் ஓடினேன். கிளாஸ் ரூம் வாசல்ல நின்னிட்டுருந்தவர்
"தம்பி 18 வயசு கம்பிளீட் ஆயிருந்தா மட்டும்தான் எழுத முடியும்." என்றார்.

10ம் வகுப்பு சான்றிதழ் படி என் பிறந்தநாள் 5.4.1981 என்பதால் எனக்கு 18 வயது பூர்த்தியாகி இருந்தது. ஆனால் உண்மையில் நான் பிறந்தது 5.6.1982. எட்டாம் வகுப்புக்காக பள்ளி மாறிய போது ஒரு புண்ணியவான் தவறுதலாக மாற்றிப் போட்டு விட்டார். ஆனால் அதற்காக நான் பல நாட்கள் வருத்தப்பட்டதுண்டு. ஆனால் அதுவே என் தலையெழுத்து மாறுவதற்கு காரணமாக அமைந்தது.

சரி விஷயத்துக்கு வருவோம். எழுத்து தேர்வுக்கு வகுப்பறைக்குள் நுழையப் போகும் முன் சட்டைப்பையைத் தடவிப் பார்த்தால் பேனா இல்லை. அப்போதும் சரி இப்போதும் சரி பேனா என்னிடம் நிரந்தரமாகத் தங்கியதே இல்லை. அன்றும் அப்படித்தான் தொலைத்திருந்தேன். படபடப்போடு சுற்றும் முற்றும் பார்த்த போதுதான் நண்பன் சுந்தரராஜ் அங்கே தென்பட்டான். அவன் வயதுக்கு (18) வரவில்லை என்பதால் தேர்வுக்கு அவனை அனுமதிக்கவில்லை. என் தவிப்பைப் பார்த்த அவன் தன் பேனாவைக் கொடுத்து வாழ்த்தி அனுப்பினான்.

அவனிடத்தில் பேனாவை இரவல்
வாங்கி தேர்வு எழுதி தேர்ச்சியும்
பெற்று பிறகு நடந்த நேர்முகத்
தேர்விலும் தேர்வு பெற்றேன். அதன்
பிறகு ஜூலை 31ம்
தேதி நெல்லையிலிருந்து மூட்டை முடிச்சுகளைக்
கட்டிக் கொண்டு தேர்வான சக
நண்பர்களோடு சென்னை வந்து பணியில்
சேர்ந்து பிறகு பணி நிரந்தமாகி சென்னையில்
இடம் வாங்கி, வீடு கட்டி, திருமணம்
முடித்து இரண்டு குழந்தைகளுக்குத்
தகப்பனாகி....
13 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.

பேனா கொடுத்தது என்ன பெரிய
உதவியா என்று நீங்கள் நினைக்கலாம்.
ஆனால் அந்த நேரத்தில்
அது கிடைத்திரா விட்டால்
அல்லது தாமதமாகியிருந்தால் நான்
அந்த தேர்வு எழுதியிருக்க முடியாது.
என் வாழ்க்கைப் பயணம்
மாறியிருந்திருக்கும். ஒரு நல்ல
வாய்ப்பை நழுவ
விட்டு விட்டோமே என்ற பரிதவிப்புடன்
இருந்திருப்பேன்.

காலத்தினாற்
செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது


என்று வள்ளுவர் சொல்வது போல சிறிய
உதவியென்றாலும் என்னைப்
பொருத்தவரை அது பெரிய
உதவியாகி மனதில் மறக்க முடியாத
நினைவாக தங்கி விட்டது. பேஸ்புக்கில்
நண்பனிடம்
இதை சொன்னபோது அப்படியா என
ஆச்சரியப்பட்டு தேங்க்ஸ் டு காட்
என்றான் தன்னடக்கத்தோடு. ஆம்.!
எல்லாப் புகழும் இறைவனுக்கே.
பட்டங்காட்டில் பனையேறிய நண்பன்
பட்டாளத்துக்கு சென்று மலையேறி விட்டதில்
சந்தோஷமாக இருந்தாலும் வருத்தமான
விஷயம் என்னவென்றால் அவன்
திருமணம் பற்றி நான்
கேட்டபோது தனக்கு இன்னும்
திருமணமாகவில்லை என்றும் பல
இடங்களில் பெண் பார்த்தும் தான்
இராணுவத்தில் இருப்பதால்
மறுத்துவிட்டதாகவும் மிக
நெருக்கமான உறவினர் கூட இதில்
விதிவிலக்கல்ல என்றும் தெரிவித்தான்.
அடடா என்ன உலகம் இது. யார்
யாருக்கோ அடிமைச் சேவகம் செய்து,
மனைவி குழந்தைகளையெல்லாம்
பிரிந்திருக்க நேரிடும் என்று தெரிந்தும்
வெளிநாடுகளில்
வேலை செய்வோருக்குத் தயங்காமல்
தங்கள் பெண்ணை மணம் முடித்துக்
கொடுக்கும் பெற்றோர், சொந்த நாட்டில்
கம்பீரமாக நாட்டைக் காக்கும்
பணியிலிருப்பவனுக்கு பெண் தர
மறுப்பது கொடுமையல்லவா?
நிச்சயம் என் நண்பனுக்கு அவன்
மனதைப் புரிந்து கொண்ட மணப்பெண்
கிடைக்கும் என்ற
நம்பிக்கையோடு அவனுடனான நட்புப்
பயணம் தொடர்கிறது பேஸ்புக்
வழியாக.

பேஸ்புக்கின் அபார
வளர்ச்சி பற்றி ஆரம்பத்தில்
சொன்னேனல்லவா? நாடு, மொழி, இனம்
போன்ற எல்லைகளைக் கடந்த
நண்பர்களை உருவாக்கித்
தருவதோடு எங்கோ எப்போதோ முடிந்து போன
பழைய நட்புகளையும் மீட்டுத்
தருவதால்தான் பேஸ்புக்
இன்று பலருக்கு அன்றாட வாழ்வின்
ஓர் அங்கமாகி விட்டது.
நண்பனை மீட்டுத் தந்த
பேஸ்புக்கிற்கு நன்றி.!

ஊர்
உறவு நட்பு வட்டாரத்தையெல்லாம்
விட்டு காஷ்மீரத்து எல்லையில்
இருக்கும் நண்பனுக்கு இப்போதைய
ஒரே ஆறுதல் பேஸ்புக் நட்புகள்தான்.
நண்பர்களே நீங்களும்
அவனுக்கு ஆறுதல் தர நினைத்தால்...
பேஸ்புக்கில் நண்பன் சுந்தரராஜனின்
முகவரி
http://
facebook.com/profile.php?
id=100003302821002

எனது முகவரி(ஹி..ஹி..)
http://
facebook.com/iammeeran/